Sunday, February 4, 2018

9. சீனியர் சிடிஸன்

ப்பா எதையுமே வெளிப்படையாகப் பேசக் கூடியவர். தன் எல்லா அனுபவங்களையும் அம்மாவிடம் சொல்லி விடுவார். 

எனக்குக் கல்யாணம் ஆனால், என்னால் என் மனைவியிடம் இவ்வளவு வெளிப்படையாக இருக்க முடியுமா என்று தெரியவில்லை!

அம்மாவிடம் சொல்வது இருக்கட்டும். என்னிடமே சொல்கிறாரே! என்னதான் அப்பா தப்பாக எதுவும் செய்யவில்லை என்றாலும், இதுபோன்ற அனுபவங்களை, மனவியைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மகனிடம் சொல்ல ஒரு மனமுதிர்ச்சியும், தைரியமும் வேண்டும்!

ஒருநாள் பத்திரிகையில் ஒரு செய்தியைப் பார்த்து விட்டு அப்பாவிடம் "ஏம்ப்பா, இப்பல்லாம் நிறையக் கோவில்ல வயசானவங்கள்ளாம் வரிசையில ரொம்ப நேரம் நிற்காம சீக்கிரமே தரிசனம் பண்ண ஏற்பாடு பண்ணியிருக்காங்களாமே!" என்றேன்.

பக்கத்திலிருந்த அம்மா உடனே பெரிதாகச் சிரித்தார்.

"ஏம்மா சிரிக்கிறே?" என்றேன்.

"இந்த சீனியர் சிடிஸன் சலுகையை எல்லாம் உங்கப்பா நல்லா அனுபவிச்சிருக்காருடா!" என்றார் அம்மா.

"இதில சிரிக்கறதுக்கு என்ன இருக்கு?" என்றேன் நான்.

"ம்ம்ம். உங்கப்பாவே சொல்லுவாரு!" என்று அம்மா விஷமச் சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தார்.

"அது ஒண்ணுமில்ல. நான் ஒரு தடவை ஒரு டூரிஸ்ட் க்ரூப்பிலே ஒரு கோவிலுக்குப் போயிட்டு வந்தேன். பஸ்ஸில வந்தா தலை சுத்தும்னு சொல்லி உங்கம்மா வரல. அதைத்தான் உங்கம்மா சொல்லிக் காட்டறா!" என்றார் அப்பா.

"சமாளிக்காதீங்க! முழுக்கதையையும் சொல்லுங்க" என்றார் அம்மா விடாமல்.

"கதை என்ன வந்திருக்கு? ஒரு சின்ன விஷயம் நடந்தது. அதைத்தான் லக்ஷ்மி  சொல்லிக் காட்டறா" என்றார் அப்பா. (சில சமயம் என்னிடம் பேசும்போது கூட அப்பா அம்மாவை லக்ஷ்மி என்று பெயர் சொல்லிக் குறிப்பிடுவார். அது அவருடைய பழக்கம். அம்மாவின் பெயரை அடிக்கடி சொல்வதில் அத்தனை ஆனந்தம் அவருக்கு!) 
*                  *                     *                   *                    *                 *                   *                  *       
டூரிஸ்ட் பஸ்ஸில் பெரும்பாலானோர் தம்பதிகளாகத்தான் வந்தனர். என் போன்று தனியாக வந்தவர் சில பேர்தான். 

ஒரு பெண்மணியும் தனியாக வந்திருந்தாள். அவளுக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். ஆனால் நாற்பது வயதுதான் சொல்லலாம். அப்படி ஒரு இளமை. வயதுக்கு மீறிய அலங்காரம் வேறு!

பஸ்ஸில் என் இருக்கைக்கு இரண்டு வரிசைகள் தள்ளி எதிர்ப்புற வரிசையில் அமர்ந்திருந்தாள் அவள்.  பஸ் போகும்போது அவள் அதிகம் என் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தாள். (இல்லை, என் கண் அவள் பக்கம் அடிக்கடி தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்ததா?)

அவளைப் பார்த்தபோது, 'ராஜியும்தான் இருக்கிறாளே!  என்னை விட ஐந்து வயது சிறியவள். ஆனால் இன்னும் அதிக வயதானவளாகத்தான் தோன்றுவாள். இந்தப் பெண் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறாள்!' என்று ஒரு கணம் தோன்றியது.

உடனேயே, 'ஒரு மாதம் முன்புதான் திருக்கடையூர் போய் அறுபதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடி விட்டு வந்தேன். இந்த வயதில் ஏன் இந்தச் சிந்தனை?' என்று என்னையே கடிந்து கொண்டேன். ஆயினும் அந்தப் பெண் மீது என் பார்வை அடிக்கடி சென்று வருவதை என்னால் தடுக்க முடியவில்லை.
*                  *                     *                   *                    *                 *                   *                  *
ப்பா சொல்ல ஆரம்பித்தார்.

"கோவில்ல ஒரே கூட்டம். பெரிய கியூ இருந்தது. அறுபது வயதுக்கு மேல் ஆனவர்களுக்குத் தனி வரிசை. அதில போனா சீக்கிரம் தரிசனம் கிடைச்சுடும்னு சொன்னாங்க. ஆனா ஐடி ப்ரூஃப் இருக்கணுமாம். நல்ல வேளையா எங்கிட்ட பேன் கார்டு இருந்தது.

சீனியர் சிடிஸனோட இன்னொருத்தர் போகறதுக்கு அனுமதி உண்டுன்னு சொன்னாங்க. தம்பதியா வந்தவங்க சேர்ந்து போயிட்டாங்க.

ஒரு பொண்ணு - அம்பது வயசு இருக்கும் அவளுக்கு - தனியா வந்திருந்தா. அவ எங்கிட்ட வந்து "சார்! நீங்க தனியாத்தானே வந்திருக்கீங்க? உங்களோட சேந்து நானும் சீனியர் சிடிஸன் கியூவில வரலாமா?"ன்னு கேட்டா. நான் சரின்னேன்.

கோவிலுக்குள்ளே நுழையறபோது நாங்க ஒண்ணா போனோம். அப்புறம் ரெண்டு பேரும் தனித்தனியாப் போயிட்டோம். வீட்டுக்கு வந்ததும் இதை நான் லக்ஷ்மி கிட்ட சொன்னேன். அதைத்தான் நான் ஏதோ தப்புப் பண்ணிட்ட மாதிரி சொல்லிக் காட்டறா உங்கம்மா!" என்றார் அப்பா.
*                  *                     *                   *                    *                 *                   *                  *
 கோவிலுக்குப் போனதும் நான் சீனியர் சிடிஸன் கியூவில் நின்றேன். அப்போது அந்தப் பெண் என்னிடம் வந்து "சார்! சீனியர் சிடிஸனோட இன்னொருத்தர் போகலாமாமே! நான் உங்களோட வரட்டுமா?" என்றாள்.

எனக்கு இன்ப அதிர்ச்சி. நான் பார்த்து ரசித்த பெண், தானே வந்து என்னுடன் பேசியதும் இல்லாமல், என்னோடு சேர்ந்து வரிசையில் வர அனுமதி கேட்கிறாள்!

"வாங்களேன்!" என்றேன் மலர்ச்சியுடன்.

கோவில் மண்டப நுழைவாயிலில் ஒரு இரும்புக் கிராதிக் கதவின் முன் ஒரு காவலாளி  நின்று கொண்டு கொஞ்சம் கொஞ்சம் பேராக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான். நான் உள்ளே போனதும் அவன் கதவை மூடி விட்டான்.

அந்தப் பெண் கதவுக்கு வெளியே நிற்க நேர்ந்தது. "நான் அவரோட வந்திருக்கேன்!" என்றாள் அவள்.

"ஓ! வாங்க" என்று சொல்லி கதவைத் திறந்து அவளை உள்ளே விட்டவன், என்னைப் பார்த்து, "ஏன் சார் உங்க சம்சாரத்தைக் கூடவே அழைச்சுக்கிட்டு உள்ள வந்திருக்கக் கூடாது?" என்றான்.

நான் அவளைப் பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தேன்.

அவள் என்னைப் பார்த்த பார்வையில் கோபம் தெரிந்தது. "நான் அவர் சம்சாரம் இல்ல. அவர் கூட வந்திருக்கேன். அவ்வளவுதான்" என்று காவலாளியிடம் சொல்லி விட்டு என்னைத் தாண்டிக் கொண்டு முன்னே சென்று விட்டாள்.
*                  *                     *                   *                    *                 *                   *                  *
"அவ்வளவுதானா? நான் எதோ சுவாரஸ்யமா இருக்கும்னு நெனச்சேன்"  என்றேன் நான் ஏமாற்றத்துடன்.

"உங்கப்பாவோட அப்பாவித்தனத்தையும் அசட்டுத்தனத்தையும் பத்திப் பேசறதே சுவாரஸ்யமான விஷயம்தான்!" என்றாள் அம்மா.
*                  *                     *                   *                    *                 *                   *                  *
"அதற்குப் பிறகு அவள் என் கண்ணிலேயே படவில்லை. கோயிலுக்குள்ளேயே அவள் எங்கோ கூட்டத்தில் மறைந்து விட்டாள். பிறகு பஸ்ஸில் திரும்பியபோதும் அவள் என் கண்ணில் படவில்லை. நானே கூட என்னையறியாமல் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கலாம்!

வீட்டுக்கு வந்ததும் ராஜியிடம் 'சீனியர் சிடிஸன் கியூவில் என்னோடு ஒரு பெண் வந்தாள்' என்று மட்டும் சொன்னேன். அதற்கே அவள் பெரிதாகச் சிரித்து "பெண்டாட்டி கூட வரலியேன்னுட்டு இன்னொரு பொண்ணைக் கூட அழைச்சுக்கிட்டுப் போனீங்களாக்கும்" என்று கிண்டல் செய்தாள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இது பற்றி என் மகனிடம் சொல்ல வேண்டிய சந்தர்ப்பம்! ராஜியிடம் சொன்னது போலவே பாலிஷாகச் சொல்லி முடித்து விட்டேன்.

வயதான காலத்தில் ஒரு வயதான பெண்ணைக் குறுகுறுவென்று பார்த்ததையும் அவள் வரிசையில் என்னுடன் வந்தது பற்றிக் கிளுகிளுப்பு அடைந்ததையும், காவலாளி அவளை என் சம்சாரம் என்று சொன்னபோது ஏற்பட்ட அற்ப சந்தோஷத்தை அசட்டுத்தனமாக வெளிக்காட்டி அந்தப் பெண்ணின் கோபத்துக்கு ஆளானதையும் விலாவாரியாக மனைவியிடமும் மகனிடமும் சொல்லிக் கொண்டு  இருக்க முடியுமா என்ன? 

(என் அனுபவத்தை உங்களிடம் சொல்லும்போது, என் மனைவி ராஜலட்சுமியை, நான் தனிமையில் அழைப்பது போல் ராஜி என்று குறிப்பிட்டதையும், என் மகனிடம் பேசும்போது என் மனைவியை லக்ஷ்மி என்று குறிப்பிட்டதையும் கவனித்திருப்பீர்களே!)

Sunday, April 23, 2017

8. அப்பாவின் நண்பர்

"இந்த வருஷம் விளைச்சல் ரொம்பக் கம்மிங்க" என்றார் சரவணன், எங்கள் விளைநிலங்களின் குத்தகைக்காரர்.

"ஆமாம். அதுதான்  மழையே பெய்யலியே!...சரி. எவ்வளவு நெல்லு தர முடியும்  உன்னால?" என்றார் அப்பா.

"முப்பது மூட்டை கொடுத்துடறேன். அதுவே ரொம்பக் கஷ்டம்தான். எனக்கு எதுவும் மிஞ்சாது" என்றார் சரவணன் மென்று விழுங்கியபடியே.

அப்பா எதுவும் சொல்லவில்லை. சரவணன் சொன்னதை ஏற்றுக் கொண்டாரா அல்லது தனது அதிருப்தியைத் தன் மௌனத்தின் மூலம் காட்டிக் கொண்டாரா என்று எனக்குப் புரியவில்லை.

அறுவடை முடிந்ததும் முப்பது நெல் மூட்டைகளை வண்டியில் கொண்டு வந்து போட்டார் சரவணன்.

கடைசி மூட்டையை இறக்குமுன், அப்பா "அதை இறக்க வேண்டாம். அதை நீயே எடுத்துக்கிட்டுப் போயிடு" என்றார்.

"எதுக்குங்க?"

"உனக்கு ஒண்ணுமே மிஞ்சலேன்னு சொன்னியே! ஒரு மூட்டையாவது இருக்கட்டும்" என்றார் அப்பா.

அப்பா இரக்கமில்லாமல் நடந்து கொள்வதாக எனக்குப் பட்டது. ஒன்று, பேசாமல் மூட்டைகளை வாங்கி வைத்திருக்க வேண்டும். அல்லது ஐந்தாறு மூட்டைகளையாவது கொடுத்திருக்க வேண்டும். இப்படி ஒரே ஒரு மூட்டையைத் திருப்பிக் கொடுத்து சரவணனை அவமானப்படுத்துகிறாரே!

சரவணன் எதுவும் பேசாமல் ஒரு மூட்டையைத் திரும்ப எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

 இது இங்கே முடியவில்லை. இதற்குப் பிறகு,  ஒவ்வொரு மாதமும் ஒரு மூட்டை நெல்லை சரவணனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் அப்பா!

சில மாதங்கள் கழித்து,"ஏம்ப்பா இப்படி  மாசத்துக்கு ஒரு மூட்டை கொடுப்பதை விட அன்னிக்கே 12 மூட்டை  கொடுத்திருந்தால் அவருக்கு உபயோகமா இருந்திருக்குமே!" என்றேன் நான்.

"சரவணன் தனக்கு எதுவுமே மிஞ்சலேன்னு சொன்னதும் நான் ரொம்ப வருத்தப்பட்டேன். சரவணன் என்னிக்குமே பொய்  சொன்னதில்லை, நம்மளை ஏமாத்தினதும் இல்லை. அவன் நமக்குக் கொடுக்கற நெல்லில் ஒரு பகுதியை அவனுக்குக் கொடுக்கணும்னு அப்பவே தீர்மானிச்சுட்டேன். மொத்தத்தையும் அன்னிக்கே கொடுத்திருந்தா சாப்பாட்டுக்கு ஒண்ணு ரெண்டு மூட்டைகளை வச்சுக்கிட்டு மீதியை அப்பவே வித்திருப்பான். பின்னால அவனுக்கு சாப்பாட்டுக்கு நெல் இருந்திருக்காது. அன்னிக்கு அவனுக்கு நல்ல விலையும் கெடைச்சிருக்காது. அதனாலதான் மாசம் ஒரு மூட்டையாக கொடுத்தேன். அதோட அவன் வீட்டில நெல் இருந்தா அதில பாதியை எலிகள் தின்னுடும்!"

சரவணனிடம் அப்பாவுக்கு இருந்த பாசம் அப்போதுதான் எனக்கு முதலில் புரிந்தது.

ங்கள் கிராமத்தில் அந்த நாளில் இருந்த ஜாதி வழக்கப்படி சரவணன் எங்கள் வீட்டுக்குள் நுழைய முடியாது. அப்பா வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்க, சரவணன் வீட்டு வாசலிலேயே நின்று பேசி விட்டுப் போவார். சில சமயம் வீட்டுக்குப் பின்பக்கம் வருவார். அப்போது அப்பாவும் பின்கட்டுக்கு வருவார். இருவரும் தோட்டத்தில் நின்றோ அமர்ந்தோ பேசிக்கொண்டிருப்பார்கள்.

பல சமயம் அம்மா சரவணனுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பார். சரவணன் தோட்டத்திலேயே மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவார். அவர் வீட்டுக்குப் போகும்போது அம்மா பலகாரங்களை இலையில் சுற்றிப் பொட்டலம் கட்டி "வீட்டுக்காரிக்கும் குழந்தைக்குகளுக்கும் குடுங்க" என்று சொல்லிக் கொடுப்பார்.

ஒருமுறை அப்பாவிடம், "ஏம்ப்பா அவரை வீட்டுக்குள்ள உக்கார வச்சு சாப்பிடச் சொல்லலாமே!" என்று கேட்டேன். "எனக்கும் அதுதான் ஆசை" என்றார் அப்பா.

அந்த வயதில் அப்பா சொன்னதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் அப்பாவுக்கும் சரவணன் மாமாவுக்கும் (மாமா என்று அவரை நான் வெளிப்படையாக அழைத்திருந்தால், ஊரில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்திருப்பார்கள்!) இருந்த நட்பும், ஜாதிக்கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய தடைகளும், அவற்றை மீறி அப்பா தன் நண்பர் மீது தான் வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தியதும், பழைய வழக்கங்களைப் பெருமளவில் கடைப்பிடிக்கும் அம்மா அப்பாவின் மனதைப் புரிந்து கொண்டு நடந்து கொண்டதும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வந்தது.

நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் அப்பா காலமாகி விட்டார். இறப்பதற்கு ஓரிரு மாதங்கள் முன்பிருந்தே அவர் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவரை இழந்து விடுவோமோ என்கிற பயம் எனக்கும் அம்மாவுக்கும் முன்பே ஏற்பட்டு விட்டது. ஆயினும் எங்கள் பயம் உண்மையானபோது ஏற்பட்ட அதிர்ச்சியும் துயரமும் எங்கள் இருவரையும் உலுக்கி விட்டன.

சரவணன் மாமாவின் நிலைதான் மிகவும் பரிதாபம். வீட்டுக்குள் வந்து அப்பாவைப் பார்க்க முடியவில்லை. பின்கட்டில் நின்று கழுத்தை நீட்டி உள்ளே எட்டிப்பார்த்து அப்பாவின் முகத்தைப் பார்த்து விட முடியுமா என்று அவர் தவித்த தவிப்பு!

ஒரு கட்டத்தில் அவரை உள்ளே வரச் சொல்லி விடலாமா என்று கூட அம்மா நினைத்தார். ஆனால் வீட்டுக்குள் நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது இருந்து கொண்டே இருந்ததால் அது முடியவில்லை. அம்மா வரச் சொல்லியிருந்தாலும் சரவணன் மாமா உள்ளே வந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்!

ப்பா போய் இரண்டு மாதங்கள் ஒடி விட்டன. நானும் அம்மாவும் எப்படியோ இந்தத் துயரத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்து விட்டோம். நான் பள்ளி இறுதித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு தேர்வையும் எழுதி விட்டேன்.

ஒருநாள் அம்மா என்னை 'சத்தம் போடாதே' என்று சைகை காட்டி விட்டுப் பின்கட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். அவர் கை காட்டிய திசையில், தோட்டத்தில் ஒரு செடிக்கு அருகே சரவணன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.

"என்ன?" என்றேன் அம்மாவிடம் புரியாமல்.

"அப்பாவை நினைத்து அவர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார் பார்!" என்றாள் அம்மா.

அப்போதுதான் கவனித்தேன். சரவணன் மாமா மௌனமாக, தான் அழுவது யாருக்கும் தெரியாமல், குலுங்கக் குலுங்க அழுது கொண்டிருந்தார். தரையில் சில கண்ணீர்த் துளிகள் விழுந்து தரை ஈரமாக இருப்பதைக் கூடப்  பார்க்க முடிந்தது.

அப்பாவின் மறைவை நானும் அம்மாவும் கூட ஏற்றுக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டோம். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகும் கூட அப்பாவின் இறப்பைத் தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறாரே, இவரைப் பற்றி என்ன சொல்ல?

அப்பாவுக்குப் பல நண்பர்கள் உண்டு. ஆயினும் 'அப்பாவின் நண்பர்' என்று சொன்னால் என் நினைவுக்கு வருபவர் சரவணன் மாமா மட்டும்தான்.

Sunday, April 9, 2017

7. அப்பாவின் நியாயங்கள்

ஒருநாள் ஆங்கிலப் பத்திரிகையில் நான் படித்த 'டபிள் ஸ்டாண்டர்ட்ஸ்' என்ற சொற்றொடருக்கு  அர்த்தம் என்ன என்று அப்பாவிடம் கேட்டேன்.

"இரட்டை நிலை" என்றார் அம்மா முந்திக்கொண்டு.

"அப்படீன்னா?"

"தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்!" என்றார் அப்பா.

"அது எப்படி? நியாயம் எல்லாருக்கும் பொதுவாத்தானே இருக்கணும்?" என்றேன்.

"இருக்கணும்தான். அப்படி இல்லாட்டாதான் 'டபிள் ஸ்டாண்டர்ட்ஸ்னு' சொல்றோம்."

"அரசியல்ல இது ரொம்ப சகஜம்" என்றார் அம்மா.

"ஏன் நம்ம வீட்டிலேயே இருக்கே!" என்றார் அப்பா. "ஒருநாள் வெளியில போயிட்டு வரும்போது வீட்டுச் சாவியை ஹோட்டலிலேயே விட்டுட்டு வந்துட்டேன். 'உங்களுக்குப்  பொறுப்பே கிடையாது' ன்னு உன் அம்மாகிட்ட திட்டு வாங்கினேன்."

"அப்புறம் என்ன ஆச்சு? பூட்டை உடைச்சீங்களா?" என்றேன் ஆவலுடன்.

"பூட்டை ஏன் உடைக்கணும்? நான் ஹோட்டலுக்குத் திரும்பிப் போய்ச் சாவியை எடுத்துட்டு வந்துட்டேன். நல்ல வேளை. சாவியை ஹோட்டலில் எடுத்து வைத்திருந்தார்கள்" என்றார் அப்பா.

"அதுவரையிலும், நான் கொட்டு கொட்டுன்னு வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருந்தேன்" என்றார் அம்மா.

"எவ்வளவு நேரம்? ஒரு பத்து நிமிஷம் இருக்குமா?" என்றார் அப்பா.

"பத்து நிமிஷத்துல எங்க வந்தீங்க? அரைமணி நேரம் ஆகியிருக்கும்."

"காத்துக்கிட்டிருக்கும்போது  எப்பவுமே நேரம் அதிகம் ஆகியிருக்கிற மாதிரிதான் தெரியும்!" என்றார் அப்பா விடாமல்.

"அது சரி. இதிலே டபிள் ஸ்டாண்டார்ட்ஸ் எங்கே வந்தது?" என்றேன் நான்.

"சொல்றேன்" என்றார் அப்பா. "இன்னொரு சமயம் உன் அம்மா ஷாப்பிங் போயிட்டு வரும்போது சாவியை எங்கேயோ வச்சுட்டு வந்துட்டா. நான் ஆஃபீஸ்ல இருந்தேன். உங்கம்மா எனக்கு  ஃபோன் பண்ணினா. எங்கிட்ட இன்னொரு சாவி இருந்ததனால ஆஃபீஸ்ல சொல்லிட்டு நான் சாவியை எடுத்துக்கிட்டு வந்து வீட்டைத் திறந்தேன். அப்ப உங்கம்மா ஒரு மணி நேரம் காத்துக்கிட்டிருந்திருப்பான்னு நினைக்கிறேன். இல்லையா பங்கஜம்?" என்று சிரித்துக்கொண்டே அம்மாவைப் பார்த்தார் அப்பா.

"சாவி கிடைச்சுதா இல்லியா?" என்றேன் நான் ஆவலுடன்.

"உனக்குக் கதை கேட்கிற ஆர்வம்! கிடைச்சுது. நான்தான் உங்கம்மா போன கடைகளுக்கெல்லாம் போய்த் தேடி அலைஞ்சு சாவியைக் கண்டுபிடிச்சு வாங்கிக்கிட்டு வந்தேன். தான் சாவியைத் தொலைச்சதைப் பத்தி உங்கம்மா என்ன சொன்னா தெரியுமா?"

"சாவியை மறந்து போய் எங்கேயாவது வச்சுட்டு வரது எல்லோருக்கும் சகஜம்தானேன்னு சொல்லியிருப்பாங்க" என்றேன் நான்.

"அப்படிப் போடு. உங்கம்மாவை நீ நல்லா புரிஞ்சு வச்சிருக்கியே!" என்றார் அப்பா.  அம்மா கோபப்படாமல் சிரித்தார்.

ப்பாவுக்கே டபிள் ஸ்டாண்டர்ட்ஸ் உண்டு என்பதை வேறு சில சந்தர்ப்பங்களில் புரிந்து கொண்டேன்.  இதை டபிள்  ஸ்டாண்டர்ட்ஸ் என்று சொல்வதை விட 'தனக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்' என்று தமிழில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் இப்படிச் சொல்வதன் பொருள் என்னவென்று, இந்தச் சந்தர்ப்பங்களை நான் விவரித்ததும் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

அப்பாவுக்கு அரசியலில் தீவிரமான கருத்துக்கள் உண்டு. வீட்டில் தன்  கருத்துக்களைச் சில சமயம் சொல்லுவார். எனக்கு அவை புரிவதில்லை. அம்மா மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒருமுறை அம்மாவும் அப்பாவும் தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வந்ததும் அம்மாவிடம் "அப்பா சொன்னபடிதான் நீ ஓட்டுப் போட்டாயா?" என்று கேட்டேன்.

அம்மா சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "நான் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று உன் அப்பா ஒரு தடவை கூட என்னிடம் சொன்னதில்லை. நான் யாருக்குப் போட்டேன் என்று கேட்டதும் இல்லை. அவர் தன் கருத்துக்களை வீட்டில் பேசுவதால், அவர் யாருக்கு ஓட்டுப் போட்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் யாருக்குப் போட்டேன் என்பது அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள அவர் விரும்பியதும் இல்லை" என்றார் அம்மா!

ஒரு முறை எங்கள் உறவினர் ஒருவர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய அரசியல் கருத்துக்கள் அப்பாவின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவர் காரசாரமாகத் தன்  கருத்துக்களைப் பேசினார். அப்பா மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சில சமயம் மரியாதைக்காக அப்பா இலேசாகத் தலையாட்டியது அவர் கருத்தை அப்பா ஏற்றுக்கொள்வது போல் கூட அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்!

அவர் ஊருக்குப் போனதும் அப்பாவிடம் கேட்டேன். "அவர் சொன்ன கருத்துக்களை நீ ஏன் மறுத்துப் பேசவில்லை?" என்று.

"அவர் நம் விருந்தாளி. அவர் கருத்தை நான் மறுத்துப் பேசினால் அவருக்கு அது பிடிக்காமல் போகலாம். நம் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியை மனம் வருந்தச் செய்வது தவறு இல்லையா?" என்றார் அப்பா.

இன்னொரு முறை நாங்கள் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்த நண்பரும் அப்பாவின் அரசியல் கருத்துக்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்டவர் போலும்! அவர் தன் கருத்துக்களை ஆணித்தரமாக அடித்துப் பேசினார். அப்பா வாயே திறக்கவில்லை. "என்ன சொல்றீங்க?" என்று அவர் ஓரிரு முறை கேட்டபோது கூட அப்பா சிரித்துக் கொண்டே தலையாட்டினார்.

நாங்கள்  வீட்டுக்குத் திரும்பியதும் அப்பாவிடம் கேட்டேன். "விருந்தாளியை மறுத்துப் பேசினால் அவர் மனம் நோகலாம், அதனால்தான் அவரை மறுத்துப் பேசவில்லை  என்று முன்பு சொன்னாய். ஆனால் இப்போது நாம் விருந்தாளியாகத்தானே உன் நண்பர்  வீட்டுக்குப் போனோம்? இப்போதும் ஏன் பதில் பேசாமல் இருந்தாய்?" என்றேன்.

"நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தினராகப் போயிருக்கும்போது அவர்கள் மனதை நோகடிக்கலாமா? அவர்கள் சொல்வதை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், சும்மா கேட்டுக்கொண்டு தலையாட்டிவிட்டு வருவதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவம்!" என்றார் அப்பா.

இது 'தனக்கொரு நியாயம், மற்றவருக்கு ஒரு நியாயம்' இல்லாமல் வேறு என்ன?

ன்னொரு சம்பவம்.

நாங்கள் ஒரு வீட்டில் குடியிருந்தோம். வீட்டைக் காலி செய்யும்போது பாத்ரூமில் சில குழாய்கள் துருப்பிடித்து விட்டதாகக் கூறி அவற்றை மாற்றுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வீட்டுக்காரர் கேட்டார்.

'அது எங்கள் தவறினால் நேர்ந்ததில்லை' என்று அப்பா விளக்கியும் கேட்காமல், 'நாங்கள் வீட்டை உங்களுக்கு எப்படிக் கொடுத்தோமோ, அதே போல் எங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டியது உங்கள் கடமை" என்று வாதாடினார் வீட்டுக்காரர்.

அப்பா அதற்கு மேல் பேசாமல், அவர் கேட்ட தொகையை நாங்கள் கொடுத்த முன்பணத்திலிருந்து கழித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டார்.

அம்மா கூட, "பைப் துருப்பிடித்தது என்றால் அவர்கள் போட்ட பைப் தரமில்லாதது என்றுதானே அர்த்தம்? நாம் எப்படி அதற்குப் பொறுப்பாக முடியும்?" என்று அப்பாவிடம் கேட்டார்.

அதற்கு அப்பா, "பரவாயில்லை, விடு. வீட்டை அவர் எப்படிக் கொடுத்தாரோ அதேபோல் ஒப்படைக்க வேண்டும் என்று வீட்டுக்காரர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது அல்லவா?" என்றார்.

இதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு  நகரின் வேறு பகுதியில் இருந்த எங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டைக் காலி செய்தார்கள். அவர்கள் வீட்டைச் சரியாகப் பராமரிக்காததால்  வீட்டில் பல பழுதுகள் ஏற்பட்டிருந்தன. சில மின் இணைப்புகள், பாத்ரூம் சுவர்கள் போன்றவற்றைப் புதிதாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

குடியிருந்தவரிடம் அப்பா "என்ன சார், வீட்டை இவ்வளவு மோசமாக வைத்துக்கொண்டிருக்கிறீர்களே! எனக்கு நிறைய ரிப்பேர் செலவு வைத்து விட்டீர்களே!" என்று கேட்டாரே தவிர, அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட இழப்பீடாகக் கேட்கவில்லை.

"நாம் குடியிருந்த வீட்டுக்கு ஆன ரிப்பேர் செலவுகளை நாம் ஏற்றுக்கொண்டது போல், நம் வீட்டு ரிப்பேர் செலவுகளைக் குடியிருந்தவர்களிடம் கேட்டு வாங்குவதுதானே நியாயம்?" என்றார் அம்மா.

"நம் வீட்டை நாம்தான் ரிப்பேர் செய்து கொள்ள வேண்டும். ரிப்பேர் செலவைக்  குடியிருந்தவர்களிடம் கேட்பது நியாயமில்லை. நம் வீட்டுக்காரர் நம்மிடம் கேட்டார் என்பதற்காக நாமும் நம் வீட்டில் குடியிருந்தவரிடம் கேட்பது எப்படி நியாயமாகும்?" என்றார் அப்பா.

"உங்கள் நியாயங்களே தனி!" என்று அலுத்துக் கொண்டார் அம்மா!

Thursday, December 22, 2016

6. ஐம்பது நாள் அவகாசம்

அப்பாவுக்கு நண்பர்கள் அதிகம். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வருவதும், நாங்கள் அவர்கள் வீட்டுக்குப் போவதும் அவ்வப்போது நடப்பதுண்டு. 

வீட்டுக்கு வருபவர்களை அம்மா நன்கு உபசரிப்பார். அதுபோல் அப்பாவின் நண்பர்கள் வீடுகளுக்கு நாங்கள் போகும்போதும் உற்சாகமாக இருப்பார். ஆயினும் அம்மாவுக்கு ஒரு குறை உண்டு.

"ஏன், ஆண்களுக்குத்தான் நண்பர்கள் இருக்க வேண்டுமா?  பெண்களுக்கு இருக்கக் கூடாதா?" என்றார் அம்மா, ஒருநாள், அப்பாவிடம்.

"ஏன் கூடாது? நாளைக்கே யாராவது ஒருவர் வீட்டுக்குப் போய் விட்டு வந்து விடலாம். நல்ல சாப்பாடு சாப்பிட்டு ரொம்பநாள் ஆகி விட்டது" என்றார் அப்பா.

"நாளைக்கு நான் சமைக்கப் போவதில்லை!" என்றார் அம்மா கோபத்துடன்.

"அதைத்தானே நானும் சொன்னேன்? நாளைக்குத்தான் உன் நண்பியின் வீட்டுக்குப் போகப் போகிறோமே!' என்றார் அப்பா.

"எனக்கு நண்பிகள் யாரும் கிடையாது."

"நண்பனாக இருந்தாலும் பரவாயில்லை. நான் தப்பாக நினைக்க மாட்டேன். உன் நண்பனின் மனைவி தப்பாக நினைக்காமல் இருந்தால் சரி!"

"கடவுளே! எனக்கு நண்பர்கள் யாருமே கிடையாது" என்றார் அம்மா இரைந்து.

"அடப்பாவமே! அத்தனை பேருடனும் சண்டையா? உன்னைப் போல சண்டைக்காரியிடம் நான் எப்படி சண்டை போடாமல் குடித்தனம் நடத்துகிறேன் பார்!" என்றார் அப்பா.

"இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்?"

"நீ ஏன் நாளைக்குச் சமைக்க மாட்டேன் என்று சொன்னாய்?"

"தினமும் நான்தான் சமைக்க வேண்டுமா?"

"பக்கத்து வீட்டு அம்மாள் சமைத்தாலும் எனக்கு ஒன்றுமில்லை. நீ வேண்டுமானால் அவர்களிடம் கேட்டுப் பாரேன்."

"தினமும் வக்கணையாக சமைத்துப் போட்டால், நல்ல சாப்பாடு சாப்பிட்டு நாளாகி விட்டது என்று நக்கலா செய்கிறீர்கள்?"

"ஓ, அதுதான் கோபமா? ஐ ஆம் சாரி அம்மணி. இனி தினமும் காலையில் ஒரு முறை மாலையில் ஒரு முறை உன் சமையலைப் புகழ்ந்து பேசி விடுகிறேன். சமைக்காமல் எல்லாம் இருந்து விடாதே! ஹோட்டலில் சாப்பிட்டால் நமக்குக் கட்டுப்படியாகாது!"

"மறுபடியும் பார்த்தீர்களா.." என்று அம்மா முறைக்க, அப்பா அம்மாவை சமாதானப்படுத்த விழைந்தார்.

"உனக்கென்ன பிரச்னை? என் நண்பர்கள் வீட்டுக்கு மட்டுமே போய்க் கொண்டிருக்கிறோம், உன் நண்பர்கள் வீட்டுக்குப் போவதில்லை என்பதுதானே? நானா வர மாட்டேன் என்கிறேன்?"

"இது ஒரு ஆணாதிக்க உலகம். ஆண்கள் தங்களுடன் படித்தவர்கள், வேலை செய்தவர்கள் என்று ஒரு பெரிய நண்பர் பட்டாளமே வைத்திருப்பீர்கள். அவர்கள் நம் வீட்டுக்கு வந்தால், நான் அவர்களுக்கு காஃபி, டிஃபன், சாப்பாடு என்று செய்து தர வேண்டும். ஆனால், பெண்களுக்குத் தங்கள் கூடப் படித்தவர்களையோ, வேலை செய்பவர்களையோ நண்பர்களாக்கிக்கொண்டு வீட்டுக்கு அழைத்து வர உரிமை இல்லை."

"இங்கே பார் விமலா, நீ படித்த காலத்தில் நம் இருவருக்கும் அறிமுகமே இல்லை. அதனால் நீ உன்னுடன் படித்தவர்களை நண்பர்கள் ஆக்கிக்கொள்ளக் கூடாது என்று நான் சொல்லியிருக்க முடியாது. நீ வேலைக்குப் போகவில்லை. வேண்டுமானால் நாளைக்கே ஒரு வேலைக்குப் போய், கூட வேலை செய்யும் ஒரு பட்டாளத்தையே வீட்டுக்கு அழைத்து வா. நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?"

"நீங்கள் ஏன் வேண்டாம் என்று சொல்லப் போகிறீர்கள்? அவர்களுக்கும் நான்தானே சமைத்துப் போட வேண்டும்?"

"அதுதான் பாயிண்ட்" என்றார் அப்பா. "இப்போது புரிகிறதா, பெண்கள் ஏன் நண்பர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்வதில்லை என்று?"

"ஏன், என் நண்பர்களுக்கு நீங்கள் சமைத்துப் போடக் கூடாதா?"  என்றார் அம்மா.

"போடலாம். அவர்கள் சாப்பிடுவார்களா என்று கேட்டுக் கொள். உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும் அல்லவா?"

"இது போல் ஏதாவது குதர்க்கமாகப் பேசி நழுவி விடுவீர்கள்."

"நழுவவில்லை. முதலில் உனக்கு நண்பர்களே இல்லையே?"

"அதனால் என்ன? எனக்கும், நம் பையனுக்கும் நீங்கள் சமைத்துப் போடலாமே? இத்தனை வருடங்களாக நான் உங்கள் இருவருக்கும் சமைத்துப் போடவில்லையா?"

"போடலாம்தான். அப்புறம் எனக்கு யார் சமைத்துப் போடுவார்கள்? ஓ.. முறைக்காதே. உங்கள் இருவருக்கும் சமைப்பதை நானும் சாப்பிடலாமே! என் அறிவுக்கு இது தோன்றவில்லை பார்!"

"'குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?' என்று மந்திரிகுமாரியில் ஒரு பாடல் வரி வரும்."

"அதில் பாதிதான் உண்மை என்று நினைக்கிறேன். நான் இன்னும் உன்னை மயக்கியதாகத் தெரியவில்லையே!"

"சமையல் கற்றுக்கொண்டு, உங்கள் சமையலால் என்னை மயக்கப் பாருங்களேன்!"

"அப்போது கூட மயக்கப் பார்க்கத்தான் முடியும். மயக்க முடியாது!"

"ஆகக்கூடி நீங்கள் சமையல் செய்யக் கற்றுக்கொள்ள மாட்டீர்கள்!"

"மாட்டேன் என்று எப்போது சொன்னேன்? கண்டிப்பாகக் கற்றுக் கொள்கிறேன். நான் சமையல் கற்றுக்கொள்ளக் கொஞ்சம் அவகாசம் வேண்டாமா?"

"எவ்வளவு அவகாசம் வேண்டும்?"

"ஒரு ஐம்பது வருஷம்.." என்ற அப்பா அம்மாவின் முறைப்பைக் கண்டு, "ஐ மீன் ஐம்பது நாள்" என்றார்.

"சரி. யாரிடம் சமையல் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள்?" என்றார் அம்மா.

"நீதான் கற்றுக் கொடுக்கப் போகிறாய் என்று நினைத்தேன்" என்றார் அப்பா.

"என் சமையல் மாதிரியே உங்கள் சமையலும் இருக்க வேண்டுமா? வேறு யாரிடமாவது கற்றுக் கொள்ளுங்கள்" என்றார் அம்மா.

"என் சமையலாவது நன்றாக இருக்கட்டுமே என்று பார்க்கிறாயாக்கும்! அதுவும் சரிதான். பக்கத்து வீட்டு அம்மாள் கற்றுக் கொடுப்பார்களா என்று கேட்டுப் பார்க்கட்டுமா?" என்ற அப்பா, மறுபடியும் அம்மாவின் முறைப்பைத் தாங்க முடியாமல், "சரி, சரி. என் அலுவலக நண்பன் சிவராமனிடம் கேட்டுப் பார்க்கிறேன்" என்றார்.

"அவருக்கு சமையல் தெரியுமா என்ன?"

"போன மாதம் அவன் வீட்டுக்கு மதிய உணவுக்குப் போயிருந்தோமே, நினைவிருக்கிறதா?"

"ஏன் நினைவில்லாமல்? அது போல ஒரு அற்புதமான சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை. அவர் மனைவியின் கைமணம் அபாரம்."

"அது அவன் மனைவியின் கைமணம் இல்லை. அவளைக் கைப்பிடித்தவனின் கைமணம். அதாவது சிவராமனின் கைமணம்" என்றார் அப்பா.

"ஆச்சரியமாக இருக்கிறதே!" என்றார் அம்மா.

"சிவராமனின் மனைவியைக் கைப் பிடித்தவன் சிவராமனாகத்தானே இருக்க முடியும்? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?" என்றார் அப்பா..

அம்மா மறுபடி ஒருமுறை அப்பாவை முறைத்து விட்டு, "அவர் சமையலில் பாதி உங்களுக்கு வந்தால் கூடப் போதும்" என்றார்.

"முழுதாகவே கற்றுக்கொண்டு விடுகிறேன். பாதி வெந்தால் நன்றாகவா இருக்கும்" என்று முடித்தார் அப்பா.

ந்தப் பேச்சு நடந்து  சில நாட்கள் கழித்து, ஒரு நாள் காலையில் படுக்கையிலிருந்து எழுந்த அம்மா தலை சுற்றிக் கீழே விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்துச் சில நாட்களில் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டோம்.

அம்மாவுக்கு ஒரு கையும், காலும் உணர்விழந்து போய் விட்டதால் அவர் வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாகத்தான் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள்.

பத்து நாட்களில் அப்பா சமைக்கக் கற்றுக் கொண்டு விட்டார். ஐம்பது நாள் அவகாசம் அவருக்குக் கிடைக்கவில்லை.

Friday, August 12, 2016

5. காதலிக்கு மரியாதை!

'மேடம்' என்று என்னால் அறியப்பட்ட அந்தப் பெண்மணியின் மரணம் பற்றிப் பத்திரிகையில் பார்த்ததும் நான் பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன் என்று சொல்ல முடியாது. என் அப்பாவின் கீழ் பணியாற்றியவர் என்று மட்டுமே நான் அவரைப் பற்றி  அறிந்திருந்தேன். 

பத்திரிகைச் செய்தியில் அவருடைய பெயரைப் பார்க்கும் வரை அவர் பெயர் கூட எனக்குத் தெரியாது. என் அப்பாவைப் பார்க்க ஓரிரு முறை எங்கள் வீட்டுக்கு வந்தபோது அவரைப் பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் என்னைப் பார்த்து நட்பாகச் சிரித்ததைத் தவிர அவர் என்னிடம் வேறொன்றும் பேசியதில்லை.

நான் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்ததால், இது பற்றி உடனேயே அம்மாவிடம் பேச முடியவில்லை. சில வாரங்கள் கழித்து வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் 'மேடத்தின்' மரணம் பற்றி விசாரித்தேன்.

(நான் கல்லூரியில் படித்த நாட்களில் தொலைபேசி வசதி அவ்வளவாகக் கிடையாது. என் அப்பா ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்ததால் எங்கள் வீட்டில் தொலைபேசி இருந்தது. ஆனால் என் கல்லூரி விடுதியிலோ, அதற்கு அருகிலோ தொலைபேசி வசதி இல்லை.

எப்போதாவது அவசரம் என்றால், தபால் அலுவலகத்துக்குச் சென்று எங்கள் வீட்டுத் தொலைபேசி எண்ணுக்கு ஒரு 'ட்ரங்க் கால்' புக் செய்து விட்டு மணிக்கணக்காகக் காத்திருக்க வேண்டும்.  ஒரே ஒரு முறை, கல்லூரி ஏற்பாடு செய்திருந்த உல்லாசப் பயணத்தில் கலந்து கொள்ள எனக்குப் பணம் அனுப்பும்படி கேட்கத்தான் இந்த வசதியைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

அப்போது கூடக் கடிதம் போட்டிருந்தால் போதும். ஒருமுறையாவது 'ட்ரங்க் கால்' செய்து பார்க்கலாமே என்ற ஆசையினாலும், என் வீட்டில் தொலைபேசி இருப்பதை என் நண்பர்களிடம் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலினாலும்தான் 'ட்ரங்க் கால்' வசதியைப் பயன் படுத்தினேன்!)

"அம்மா நம் வீட்டுக்கு ஒரு மேடம்  வருவாரே, அவர் இறந்து விட்டார் போலிருக்கிறதே. பத்திரிகையில் பார்த்தேன். அவர் பெயர் எமிலிதானே?"

"தமிழ்ப் பத்திரிகையில் பார்த்தாயா?" என்றார் அம்மா சம்பந்தமே இல்லாமல்.

"ஆமாம். அதற்கென்ன?"

"அதனால்தான் அவர் பெயரை அவசரத்தில் தப்பாகப் படித்திருக்கிறாய். அவர் பெயர் எமிலி இல்லை, எழிலி."

"எழிலி! இப்படியெல்லாம் பெயர் வைத்துக்கொள்வார்களா என்ன?"

"எனக்குத் தெரியாது. ஆனால் எனக்குத் தெரிந்த வேறு எழிலி யாரும் இல்லை. இப்படியெல்லாம் பெயர் வைத்துக்கொள்வார்களா என்று கேட்கிறாயே, யாரும் பெயர் வைத்துக் கொள்வதில்லை, வைக்கப்படுகிறார்கள்."

"ஏம்மா நீ என்ன தமிழ் பண்டிட்டா?"

"இது தமிழ் சம்பந்தப்பட்டதில்லை, நடைமுறை சம்பந்தப்பட்டது!"

"ஆளை விடும்மா. அது சரி. எழிலி என்றால் என்ன அர்த்தம்?"

"ம். இந்தத் தலைமுறைக்குத் தமிழே தெரியாமல் போய் விட்டது. எழிலி என்றால் அழகானவள் என்று அர்த்தம்."

"ஓ!"

"என்ன ஓ? அவர்களைப் பார்த்தால் அவ்வளவு அழகானவர் என்று சொல்ல முடியாதே, அவர்களுக்கு எப்படி இந்தப் பெயர் வைத்தார்கள் என்று யோசிக்கிறாயா?"

"அம்மா, இங்கே பார். நீதான் நான் அப்படி நினைப்பதாகச் சொல்கிறாய். அப்படி நினைத்ததாக நான் சொல்லவில்லை!" என்றேன் ஜாக்கிரதை உணர்வுடன்.

"அப்படி நினைக்கவில்லை என்றும் நீ சொல்லவில்லையே!" என்று மடக்கினர் அம்மா. "அப்படி நினைப்பது உன் தப்பு என்று சொல்ல மாட்டேன். இந்த எண்ணம் இயல்பாக எல்லோருக்கும் வரக்கூடியதுதான். கருப்பாக இருக்கிற ஒருவருக்கு வெள்ளையன் என்று பெயர் வைத்தால், மற்றவர்கள் சற்று புருவத்தை உயர்த்தித்தான் பார்ப்பார்கள். ஒரு குழந்தை மற்றவர்கள் கண்ணுக்கு எப்படி இருந்தாலும், பெற்றவர்களுக்கு அது ஒரு அரிய பொக்கிஷம்தான். அதனால் எழிலியின் பெற்றோர்கள் அவருக்கு எழிலி என்று பெயர் வைத்ததில் வியப்பதற்கு எதுவும் இல்லை. இன்னொரு விதத்தில் பார்த்தால் எழிலி என்ற பெயருக்கு மிகவும் பொருத்தமானவர்தான் அவர்."

"எப்படிச் சொல்கிறாய்?"

"அவருடைய பர்சனாலிட்டியை வைத்துப் பார்த்தால் அவர் மிகவும் அழகானவர்தான்."

"ஓ! இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?"

"முதலில் உன் அப்பா சொல்லி. அப்புறம் நானே பார்த்ததில்."

'அப்பாவுக்கு.." என்று துவங்கியவன், என் மனதில் இருப்பதை எப்படிக் கேட்பது என்று தெரியாமல் சற்றுத் தயங்கி விட்டு, "ஆமாம். ஆரம்ப காலத்தில் அவர் அப்பாவுக்கு செகரட்டரியாக இருந்திருக்கிறார் என்று தெரியும். அப்புறம் இரண்டு பேருமே வேறு நிறுவனங்களுக்குப் போய் விட்டார்கள். ஆனால் அவர் அவ்வப்போது அப்பாவை வந்து பார்த்து விட்டுப் போய்க்கொண்டிருந்தாரே, ஏன்?"

"அவர்களுக்குள் வேறு எதாவது உறவு இருந்ததா என்று கேட்கிறாயா?"

"இதையும் நான் கேட்கவில்லை. நீதான்..சரி.. அவர் அப்பாவைக் காதலித்தாரா?"

"இல்லை" என்றார் அம்மா சுருக்கமாக.

"அப்பாடா" என்று நான் சற்று நிம்மதியடைந்த அடுத்த வினாடியே அம்மா அந்த குண்டை வீசினார். "உன் அப்பாதான் அவரைக் காதலித்தார்."

நான் அதிர்ச்சியுடன் அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். "என்னம்மா, கொஞ்சம் கூட வருத்தம் இல்லாமல் சொல்கிறாய்? இதில் உனக்கு வருத்தம் இல்லையா?"

"நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? உன் அப்பாதான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாரே!" என்றார் அம்மா.

எழிலி மேடம் பற்றிய விஷயத்தை அம்மா மிகவும் ரசித்து, கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுவதாகத் தோன்றியது.

"அப்பா ஏன் எழிலி மேடத்தைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?" என்றேன் நான், என் கேள்வி சரியானதுதானா என்ற குழப்பத்துடனேயே.

"இதற்கும் அதே பதில்தான். உன் அப்பாதான் என்னைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டாரே!" என்ற அம்மா உடனேயே "உன் பொறுமையை இதற்கு மேலும் சோதிக்க விரும்பவில்லை" என்று சொல்லி விட்டு, நடந்தவற்றை விவரமாகச் சொல்ல ஆரம்பித்தார். (அம்மா சொன்னதை அவர் சொன்னபடியே எழுதுகிறேன். அதுதானே சரியாக இருக்கும்?)

அம்மா சொன்னார்:

உன் அப்பா ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்தபோது அவரது உதவியாளராக வந்து சேர்ந்தவர்தான் எழிலி. எழிலியின் திறமையான செயல்பாடு, வேலையில் அவருக்கு இருந்த ஈடுபாடு, அவ்வப்போது உன் அப்பாவுக்கே ஆலோசனை கூறும் அளவுக்கு இருந்த அவரது புத்திசாலித்தனம் ஆகியவை அவர்மீது உன் அப்பாவுக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தி விட்டன.

ஒருநாள் உன் அப்பா எழிலியிடம் 'என்னைக் கல்யாணம் செய்து கொள்கிறாயா?' என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு எழிலி 'உங்கள் பெற்றோர் இதற்குச் சம்மதிப்பார்களா?' என்று பதிலுக்குக் கேட்டிருக்கிறார்.'

'முதலில் உன் சம்மதம் இருந்தால்தானே என் பெற்றோரிடம் கேட்க முடியும்?' என்று சொல்லியிருக்கிறார் உன் அப்பா.

 'முதலில் உங்கள் பெற்றோர் சம்மதிக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்'  என்று சொல்லியிருக்கிறார் எழிலி.

'என் பெற்றோர் இதற்குச் சம்மதித்தால் நீ என்னைக் கல்யாணம் செய்து கொள்வாய் என்று பொருள் கொள்ளலாமா?' என்று கேட்டிருக்கிறார் உன் அப்பா விடாமல்.

'முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும். அப்புறம் அவரைச் சித்தப்பா என்று அழைப்பதில் ஒன்றும் பிரச்னை இருக்காது' என்று மழுப்பி விட்டார் எழிலி.

உன் அப்பா  தன் பெற்றோரிடம் கேட்டிருக்கிறார். உன் தாத்தா பாட்டி இதற்குச் சம்மதிக்கவில்லை.

"என்ன காரணத்துக்காகச் சம்மதிக்கவில்லை?" என்றேன் நான்.

"அந்தக் காலத்தில் பெற்றோர் காதல் திருமணத்துக்குச் சம்மதிப்பது  என்பது பாலைவனத்தில் மழை பெய்கிற மாதிரி அரிதான  விஷயம். சம்மதிக்காமல் இருப்பதற்குக் காரணம் தேவையில்லை. சம்மதித்தால்தான் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும் - பெண் பெரிய செல்வந்தரின் மகள் என்கிற மாதிரி!"

"சரி அப்புறம் என்ன ஆயிற்று?"

அம்மா கதையைத் தொடர்வதற்கு முன் ஒரு கொக்கியைப் போட்டார். "அதற்காக இந்தக் காலத்துப் பெற்றோர்கள் எல்லாம் காதல் திருமணத்துக்குப் பச்சைக்கொடி காட்டுபவர்கள் என்று நினைத்துக்கொள்ளாதே. நாளைக்கு நீ யாரையாவது காதலிக்கிறேன் என்று வந்து நின்றால், நானும் உன் அப்பாவும் அதற்குச் சம்மதிக்க மாட்டோம்!" என்றார் அம்மா.

இதற்கு நான் ஒன்றும் பதில் சொல்லாததால் அம்மா கதையைத் தொடர்ந்தார்:

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், உன் தாத்தா பாட்டி உன் அப்பாவிடம் 'முதலில் அந்தப் பெண் இதற்குச் சம்மதித்தாளா?' என்று கேட்டிருக்கிறார்கள்.

உன் அப்பா, 'இதென்ன அவளானால்  நீங்கள் இதற்குச் சம்மதிப்பீர்களா என்று கேட்கிறாள். நீங்கள் என்னவென்றால் அவள் சம்மதித்தாளா என்று கேட்கிறீர்கள். இரண்டு பேரும் பேசி வைத்துக்கொண்டு செயல்படுகிறீர்களா என்ன?' என்று கேட்டிருக்கிறார்.

'அப்படிச் சொல்லியிருந்தால் அவள் நல்ல பெண்தான். ஆனாலும் நாங்கள் இதற்கு ஒப்புக்கொள்ள முடியாது' என்று சொல்லி விட்டாராம் உன் தாத்தா.

உன் அப்பா இதை எழிலியிடம் சொல்ல, அவர் 'இதை நான் எதிர்பார்த்தேன்' என்றார். அதோடு முடிந்தது உன் அப்பாவின் காதல் கதை.

"அப்பா இதை அப்படியே விட்டு விட்டாரா?" என்றேன் நான்.

"விட்டிருப்பாரா என்ன?" என்ற அம்மா தொடர்ந்து சொன்னர்:

'நாம் ஏன் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது?' என்று என்று எழிலியிடம் கேட்டிருக்கிறார் உன் அப்பா.

 'உங்கள் அப்பா அம்மாவின் விருப்பத்துக்கு எதிராக என்னைக் கல்யாணம் செய்து கொள்வீர்களா?' என்று எழிலி கேட்க, உன் அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை.

சில நாட்கள் கழித்து, 'என்னைக் கல்யாணம் செய்து கொள்வதில் உனக்கு ஏன் விருப்பம் இல்லை? அதை மட்டும் சொல்லு? என்று குடைந்திருக்கிறார் உன் அப்பா.

'விருப்பம் இல்லை என்று நான் எப்போது சொன்னேன்?' என்று எழிலி கேட்க, உன் அப்பா, 'நீ சொல்லாவிட்டாலும் அது எனக்குப் புரிகிறது' என்றாராம்.

'விருப்பம் இல்லை என்று சொல்வதை விட உங்களுக்கும் எனக்கும் பொருத்தம் இருக்காது என்று நான் நினைக்கிறேன்' என்று எழிலி சொன்னதற்கு, 'நீ சொல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறதே! உனக்கும் எனக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கிறது என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்?' என்று சொல்லியிருக்கிறார் உன் அப்பா.

'அது வேலை விஷயத்தில். உங்கள் மனதில் இருப்பது எனக்குப் புரியும். உங்களுக்கு எது நல்லது என்பதும் எனக்குத் தெரியும். உங்களுடைய திறமை என்ன, பலவீனம் என்ன என்று தெரிந்து வைத்திருப்பதால்தான் உங்களுக்கு ஆலோசனை சொல்லும் அளவுக்கு அதிகப்பிரசங்கித்தனமாக நடந்து கொண்டிருக்கிறேன்.'

'அதை அதிகப்பிரசங்கித்தனமாக நான் நினைக்கவில்லையே! உன் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டுதானே நடந்து கொண்டிருக்கிறேன்?'

'நீங்கள் அப்படி நினைக்க மாட்டீர்கள் என்பதால்தான் என்னால் தைரியமாக என் யோசனைகளை உங்களுக்குத் சொல்ல முடிந்தது. வேறொருவராக இருந்தால் 'நான் சொல்வதைச் செய்வதுதான் உன் வேலை. எனக்கு யோசனை சொல்லும் அதிகப்பிரசங்கித்தனம் எல்லாம் வேண்டாம்' என்று சொல்லி என் வாலை ஒட்ட நறுக்கி இருப்பார்கள்!'

 'அப்புறம் என்ன?'

'சார், இதெல்லாம் அலுவலகத்தில். ஒருவேளை நாம் கல்யாணம் செய்து கொண்டால், நம் குடும்ப வாழ்க்கையிலும் இதே போன்ற நிலைதான் இருக்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்?'

'ஏன் இருக்காது?'

'இல்லாமல் போவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. முதலில் ஒரு அலுப்பு ஏற்படும். அலுவலகத்தில் இருவரும் எட்டு மணி நேரம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, வீட்டுக்குப் போன பிறகும் இதே முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால், நாளடைவில் ஒரு சலிப்பு ஏற்படலாம். ஏற்பட வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் ஏற்பட நிறையவே வாய்ப்பு இருக்கிறது.

'இரண்டாவது, உங்களுக்கு ஒரு நல்ல செகரட்டரியாக இருக்கும் நான் ஒரு நல்ல மனைவியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சொல்லப் போனால், உங்களுக்கு என்னைப்பற்றி எதுவுமே தெரியாது. நானாவது ஓரளவுக்கு உங்களைப் பற்றிப் புரிந்து வைத்திருக்கிறேன் - உங்கள் பெற்றோர் நம் திருமணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்பதைக் கூட.'

'அலுவலகத்தில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் நாம் குடும்ப வாழ்க்கையிலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டிருக்கலாம்!' என்று உன் அப்பா சொல்லி இருக்கிறார்.

'சார், தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் உங்கள் வேலையிலேயே அதிக அக்கறை செலுத்துவதால், நீங்கள் வெளி உலகத்தை சரியாக கவனித்துப் பார்த்ததில்லை. ஒரே அலுவலகத்தில் வேலை செய்த சிலர் திருமணம் செய்து கொண்டு மண வாழ்க்கையில் ஏமாற்றம் அடைந்ததை நான் பார்த்திருக்கிறேன். நான் மனோதத்துவம் படித்ததில்லை. ஆனால் அலுவலகத்தில் இருக்கும் சுமுக உறவின் அடிப்படையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவுக்கு வருவது ஒரு மனரீதியான பொறி - சைக்கலாஜிக்கல் டிராப் - என்று நினைக்கிறேன். எலி, பொறியில் சிக்கிக்கொள்வது போல், பலர் இதில் சிக்கிக்கொள்கிறார்கள். சமீபத்தில் 'பாலும் பழமும்' என்று ஒரு சினிமா பார்த்தேன்.'

'அப்படி ஒரு சினிமா வந்திருக்கிறதா என்ன? அதற்கும் நாம் பேசுகிற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?'

'பார்த்தீர்களா? எனக்கு சினிமாவில் ஈடுபாடு உண்டு. உங்களுக்கு அடியோடு இல்லை. இது நமக்குள் இருக்கக்கூடிய முரண்பாடுகளுக்கு ஒரு உதாரணம். அதில் டாக்டராக வரும் சிவாஜி ஒரு நர்ஸான சரோஜா தேவியைக் கல்யாணம் செய்து கொள்வார். இதைக் கிண்டல் செய்து எம் ஆர் ராதா ஒரு வசனம் பேசுவார். 'டாக்டர்னா நர்ஸைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும், இன்ஜினியர்னா சித்தாளைத்தான் கட்டிக்கணும்' என்று. வேடிக்கையாகத் தோன்றினாலும் இந்தக் கிண்டலில் ஒரு ஆழமான பொருள் இருப்பதாக எனக்குத் தோன்றியது. ஒன்றாக வேலை செய்பவர்கள் திருமணம் செய்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பது தவறான கணக்காக இருக்கும்.'

"அப்பா சமாதானம் அடைந்து விட்டாரா?" என்றேன் நான்.

"அவருக்கு வேறு வழி இல்லை" என்றார் அம்மா.

"இதற்குப் பிறகுதான் அப்பாவும் எழிலி மேடமும் வேறு வேறு கம்பெனிகளுக்கு வேலைக்குப் போய் விட்டார்களா?"

"ஆமாம். ஆனால் இதற்குக் காரணமும் எழிலிதான். அவர்கள் இருவருக்குமே அந்த நிறுவனத்தில் அதற்கு மேல் வளர்ச்சி இருக்காது என்பதை உணர்ந்த எழிலி உன் அப்பாவை வேறு நிறுவனத்துக்கு வேலைக்கு முயற்சி செய்ய ஊக்குவித்தார். உன் அப்பா வேறு நல்ல வேலை கிடைத்துப் போனதும், எழிலியும் வேறு நல்ல வேலைக்குப்  போய் விட்டார். அதற்குப் பிறகு காலப்போக்கில் இருவருமே மிக உயர்ந்த நிலைக்கு வந்து விட்டனர்."

'உன் கல்யாணத்தைப் பற்றிச் சொல்லவில்லையே!"

"இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, நல்ல பிள்ளையாக, தன் பெற்றோர் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு விட்டார் உன் அப்பா!"

"ஆமாம். இந்த விவரம் எல்லாம் கல்யாணத்துக்கு முன்பே உனக்குத் தெரியுமா?"

'ஓ! பெண் பார்க்க வரும்போதே என்னிடம் தனியாகப் பேச வேண்டும் என்று சொல்லி எழிலியைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லி விட்டார் உன் அப்பா. நாங்கள் இரண்டு பேரும் அரை மணி நேரத்துக்கு மேல் தனியாகப் பேசிக்கொண்டதைப்  பார்த்து எங்கள் இருவரது பெற்றோரும் ஆச்சரியப்பட்டார்கள்."

"அப்பா மிகவும் நேர்மையானவர்தான்."

"ஆமாம். அத்துடன் அவர்  மிகவும் ஜாக்கிரதை உள்ளவர். பின்னால் நான் எதுவும் குறை சொல்லக்கூடாது என்பதற்காகவும் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லி இருப்பார்!"

"கடைசி வரை எழிலி மேடம் அப்பாவுடன் டச் வைத்திருந்தார் போலிருக்கிறதே!"

"ஆமாம். அவ்வப்போது அப்பாவுக்கு ஃபோன் செய்வார். அநேகமாக நான்தான் ஃபோனை எடுப்பேன். 'நான் எழிலி பேசுகிறேன் மேடம். எப்படி இருக்கீங்க?' என்று விசாரித்து விட்டு, உடனேயே 'சார் இருக்கிறாரா?' என்பார். நம் குடும்ப விஷயம் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் பேசியதில்லை. உன் அப்பாவிடமும் பேசியிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

"உன் அப்பா, எழிலி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் உத்தியோக முன்னேற்றத்துக்கு உதவியிருக்கிறார்கள். இன்று உன் அப்பா ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கு எழிலியின் ஊக்குவிப்பும், ஆலோசனைகளும் ஒரு முக்கியக் காரணம். அது போல, கல்வித்தகுதி அதிகம் இல்லாத எழிலி ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி பதவிக்கு உயர்ந்தார் என்றால் உன் அப்பாவின் ஊக்குவிப்பும், எழிலியின் திறமைகள் பற்றி அவர் பலரிடமும் எடுத்துச் சொன்னதும் ஒரு முக்கிய காரணம்.

"என் பார்வையில், உன் அப்பா எழிலிக்கு உதவியதை விட, எழிலி உன் அப்பாவுக்கு உதவியதுதான் அதிகம். இதை நான் உன் அப்பாவிடமும் சொல்லியிருக்கிறேன். அவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்."

"நீங்கள் மூன்று பேருமே மிகவும் மனமுதிர்ச்சியுடன் நடந்து கொண்டிருக்கிறீர்கள். அப்பா தன் காதல் தோல்வியைப் பெரிதாக நினைக்காமல் கல்யாணம் செய்து கொண்டது, கல்யாணத்துக்கு முன் உன்னிடம் வெளிப்படையாகப் பேசியது, நீ அப்பாவுக்கும் எழிலி மேடத்துக்கும் இருந்த தொழில் முறை உறவைச் சரியாகப் புரிந்து கொண்டது, எழிலி மேடத்தின் முதிர்ச்சியான அணுகுமுறை, அப்பாவின் முன்னேற்றத்தில் அவர் காட்டிய அக்கறை எல்லாமே எனக்கு பிரமிப்பாக இருக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில், சம்பந்தப்பட்ட மூன்று பேருமே இத்தனை முதிர்ச்சியுடன் நடந்து கொண்டிருப்பது ஒரு ஆச்சரியமான விஷயம்" என்றேன் நான்.

"நீ பெரிய அனுபவஸ்தன் மாதிரி பேசுகிறாயே, இத்தனை முதிர்ந்த  சிந்தனை உனக்கு எப்படி வந்தது?" என்றார் அம்மா.

அப்போது அப்பா தற்செயலாக அங்கே வந்தார். "என்ன அம்மாவும் பிள்ளையும் எதோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருப்பது போல் தெரிகிறதே!" என்றார்.

"எழிலியின் மரணச் செய்தி பற்றிப் பத்திரிகையில் பார்த்து விட்டு என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தான்."

அப்பாவின் முகத்தில் சிறிய மாறுதல் தெரிந்தது. "எழிலியைப் பற்றி இவனுக்குத் தெரியுமா என்ன?" என்றார் சற்றே பதற்றத்துடன்.

"அவர் பெயரையே இப்போதுதான் கேள்விப்படுகிறானாம்!" என்றார் அம்மா யதார்த்தமாக.













Friday, June 5, 2015

4. காதல் என்பது எதுவரை?

இந்தக் கதை எனக்குத் தெரியும் என்பது அப்பாவுக்குத் தெரியாது. ஒரு சமயம் நான் தூங்கி விட்டதாக நினைத்துக் கொண்டு அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுத்தான் நான் இதை அறிந்து கொண்டேன்.

அப்பா ஒரு வாரப் பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்தார். அதில் வந்திருந்த கேள்வி-பதில்' பகுதியில் தான் படித்த ஒரு சுவாரசியமான விஷயத்தை அப்பா அம்மாவிடம் சொல்லி ரசிக்க விரும்பினார். அதனால் வம்பில் மாட்டிக்கொண்டார்!

"இங்கே பார்த்தாயா 'நீங்கள் இள வயதில் காதலித்திருக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு அவர் சொல்லியிருக்கும் பதிலை? 'ஜலதோஷம் பிடிக்காத மூக்கு, சிரங்கு வராத சருமம், காதல் வயப்படாத இளமை இவை மூன்றும் இல்லவே இல்லை!' என்று பதில் சொல்லி இருக்கிறார். எவ்வளவு உண்மை?"

"எவ்வளவு உண்மையா? அப்படியானால் நீங்கள் காதலித்திருக்கிறீர்களா? ஏன் என்னிடம் சொல்லவே இல்லை?" என்று பிடித்துக் கொண்டார் அம்மா.

"நான் காதலைப் பற்றிச் சொல்லவில்லை. மற்ற இரண்டையும் பற்றிச் சொன்னேன்" என்றார் அப்பா.

"சமாளிக்காதீர்கள். உண்மையைச் சொல்லுங்கள். உங்களை நான் ஒன்றும் விவாகரத்து செய்து விட மாட்டேன்" என்றார் அம்மா.

"அப்படியெல்லாம் அற்புதங்கள் நிகழ்ந்து விடுமா என்ன?" என்று அப்பா சொன்னது எனக்கு மட்டும் கேட்டது. அம்மாவுக்கு நிச்சயமாகக் கேட்டிருக்காது!

"நான் பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் வகுப்பில் படித்த ஒரு பெண் கணக்கில் மிகவும் பலவீனமாக இருந்தாள். நான் கணக்கில் நிறைய மதிப்பெண்கள் வாங்குவேன். அவள் அப்பாவும்  என் அப்பாவும் சிறு வயது முதலே நண்பர்கள். அவள் அப்பா என் அப்பாவிடம் கேட்டுக் கொண்டதால் என் அப்பா என்னை அவளுக்குக் கணக்கு சொல்லிக் கொடுக்கச் சொன்னார்."

"அவள் பெயர் என்ன?"

"ராதிகா."

"அந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட மாடர்ன் பெயர்கள் எல்லாம் வைத்திருக்கிறார்களே! அவள் எப்படி இருப்பாள்? அழகாக இருப்பாளா?"

"இங்கே பார். அந்த வயதில் ஒரு பெண்ணைப் பார்த்தால் அவள் அழகாக இருப்பாளா என்றெல்லாம் நினைக்கத் தோன்றாது."

"ஏன், சினிமா நடிகைகளைப் பார்த்து அழகு, அழகில்லை என்றெல்லாம் அந்த வயதில் நீங்களும் உங்கள் நண்பர்களும் பேசிக் கொண்டதில்லையா? சரி. பரவாயில்லை. மேலே சொல்லுங்கள்."

"நான் என்ன கதையா சொல்லிக் கொண்டிருக்கிறேன்? தினமும் மாலையில் அவள் என் வீட்டுக்கு வருவாள். எங்கள் வீட்டில் இருட்டாக ஒரு அறை இருக்கும். அதற்குக் காமரா உள் (அறை) என்று பெயர். அப்போது எங்கள் வீட்டில் மின்சார விளக்குக் கூடக் கிடையாது. அந்த அரை இருட்டில்தான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பேன். ஏதாவது கற்பனை செய்து கொள்ளாதே! அந்த அறைக் கதவு திறந்துதான் இருக்கும். கதவு திறந்திருந்தால்தான் கூடத்திலிருந்து கொஞ்சமாவது வெளிச்சம் வரும்! அறைக்கு நேர் வெளியே யாராவது உட்கார்ந்து கொண்டோ நடமாடிக்கொண்டோதான் இருப்பார்கள். அன்றன்றைக்கு வகுப்பில் ஆசிரியர் போட்ட கணக்குகளை அவளுக்குப் புரியும்படியாகப் போட்டுக் காட்டுவேன். அவ்வளவுதான்."

"ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் கிளாஸ்?"

"அரை மணி நேரம் இருக்கும். அதற்குள் இருட்டி விடும். அதற்குள் அநேகமாக அன்று வகுப்பில் போடப்பட்ட கணக்குகள் எல்லாவற்றையும் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பேன்."

"கணக்கு வாத்தியார் சொல்லிக் கொடுத்தபோது புரியாதது நீங்கள் சொல்லிக் கொடுத்தபோது புரிந்ததாக்கும்!"

"அப்படித்தான் அவள் தன் அப்பாவிடம் சொல்லி இருக்கிறாள். அதை அவர் என் அப்பாவிடம் வந்து சொன்னார். அதோடு காலாண்டுத் தேர்வில் கணக்கில் ஃபெயில் மார்க் வாங்கியவள் அரையாண்டுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கியிருந்தாள். அவள் அப்பாவுக்கு ரொம்பவும் சந்தோஷம். 'இதற்கு நீதாண்டா காரணம்' என்று என்னை நேரடியாகப் பாராட்டினார். எனக்கு நன்றி கூடச் சொன்னார்."

"உங்கள் அப்பா என்ன சொன்னார்?"

"என் அப்பா சொன்னதுதான் என் மனதை மிகவும் நோகடித்து விட்டது."

"அப்படி என்ன சொன்னார்? 'என் பிள்ளைக்கே கணக்கு வராது. அவன் சொல்லிக் கொடுத்து உன் பெண் கணக்கில் தேறி விட்டாள் என்றால், உன் பெண்தான் புத்திசாலியாக இருக்க வேண்டும்' என்று சொன்னாரா?"

"பக்கத்தில் நின்று கேட்டது போல் சொல்லுகிறாய்! ஆனால் அவர் அப்படிச் சொல்லவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால் கூடப் பரவாயில்லயே!"

"வேறு எப்படிச் சொன்னார்? சீக்கிரம் சொல்லித் தொலையுங்கள். ஏன் இப்படி சஸ்பென்ஸ் வைத்து என் கழுத்தை அறுக்கிறீர்கள்?"

"நீதான் நான் சொல்வதற்குள் குறுக்கே பேசி, இப்படிச் சொன்னாரா, அப்படிச் சொன்னாரா என்று கற்பனை செய்து சொல்ல ஆரம்பித்தாய்!"

"கன்னத்தில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்கிறேன். இனிமேலும் என்னால் சஸ்பென்ஸைப் பொறுத்துக் கொள்ள முடியாது. சீக்கிரம் சொல்லுங்களேன்" என்று கெஞ்ச ஆரம்பித்தார் அம்மா.

"கன்னத்தில் போட்டுக் கொண்டால் போதாது. தோப்புக் கரணம் போட வேண்டும், 108 தடவை. சரி சரி, அழுது விடாதே. சொல்லி விடுகிறேன். என் அப்பா என்ன சொன்னார் என்றால்..." என்று அப்பா நிறுத்தினார்.

அம்மா பல்லைக் கடித்துக்கொண்டு தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையைக் கடைப்பிடித்துக் கொண்டிருந்தார்.

"அப்பா என்ன சொன்னார் என்றால், 'இதற்கு ஏன் நன்றி எல்லாம் சொல்கிறாய்? இவனுக்கு ஒரு தங்கை இருந்தால் அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டானா?' என்றார்!" என்று முடித்தார் அப்பா.

சற்று முன்பு வரை இருந்த இறுக்கம் உடைந்து அம்மா பெரிதாகச் சிரித்தார். "அடப்பாவமே! ஜெமினி-சாவித்திரி போல் காதல் ஜோடியாக இருந்த உங்களை சிவாஜி-சாவித்திரி மாதிரி அண்ணன் தங்கைகளாக மாற்றி விட்டாரே உங்கள் அப்பா! அதனால்தான் காதல் மன்னர் மனம் நொந்து போய் விட்டீர்களோ?"

"நான் மனம் நொந்தது அதற்காக இல்லை. நான் கஷ்டப்பட்டு அவளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவளும் கற்றுக் கொண்டு நிறைய மார்க் வாங்கி இருக்கிறாள். இதற்காக அவள் அப்பா என்னைப் பாராட்டினால், அதற்கு நான் தகுதி இல்லாதவன் என்கிற மாதிரி சொல்லி விட்டாரே என் அப்பா என்பதுதான் எனக்கு வருத்தம்."

"இந்த அப்பாக்களே அப்படித்தான்!"

"இரைந்து பேசாதே. நம் பையன் தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு நீ சொன்னது அவன் காதில் விழுந்து விடப் போகிறது" என்றார் அப்பா. அப்பாவின் நகைச்சுவை உணர்வைக் கண்களை மூடியபடியே ரசித்தேன்.

"அது சரி, உங்கள் அப்பா உங்களை அண்ணன் தங்கை என்று பேசிய பிறகுமா நீங்கள் அந்தப் பெண்ணைக் காதலித்தீர்கள்?" என்றார் அம்மா, கதையின் மையக்கருத்தை மறக்காமல்.

"இரண்டு விஷயம்" என்றார் அப்பா பொறுமையாக. அப்பா பொறுமையாகப் பேசினால் அவர் கோபத்தை அடக்கிக் கொண்டு பேசுகிறார் என்று அர்த்தம்!

"முதல் விஷயம் - என் அப்பா ஒரு பேச்சுக்கு அந்தப் பெண்ணை என் தங்கை போல் என்று சொன்னதால் நாங்கள் அண்ணன் தங்கை ஆகி விட மாட்டோம்!"

"ஓ! இப்படி ஒரு நியாயமா?"

"நான் சொல்வதை முழுவதுமாகக் கேள்" என்றார் அப்பா. இப்போது அவர் "பொறுமை" இன்னும் சற்று அதிகரித்திருந்தது! "இரண்டாவது விஷயம் - எங்களுக்குள் கடைசி வரை ஒரு காதலும் வரவில்லை."

"அப்படியானால், ஏன் இதைக் காதல் கதை என்று சொன்னீர்கள்?" என்றார் அம்மா ஏமாற்றத்துடன்.

"நான் எப்போது சொன்னேன்? முதலிலிருந்தே நான் யாரையும் காதலிக்கவில்லை என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்? நீதான் நம்பாமல் 'சொல்லுங்கள்,' 'சொல்லுங்கள்' என்றாய்!"

"அப்புறம் ஏன் இந்தக் கதையைச் சொன்னீர்கள்?"

"நீதானே காதல் கதை கேட்டாய்?"

"அதுதான் உங்களுக்குள் காதல் வரவேயில்லை என்று சொன்னீர்களே?"

"எனக்குக் காதல் வராவிட்டால் என்ன? கதையில் காதல் வருகிறதே! நான் கதையை முழுவதுமாகச் சொல்வதற்குள் நீ அவசரப் பட்டால் நான் என்ன செய்வது?"

அம்மாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று உணர்ந்து மௌனமாக இருந்தார்.

"என்ன பதிலையே காணோம்?" சீண்டினார் அப்பா!

"நீங்கள் உங்கள் வழியிலேயே உங்கள் காதல் கதையைச் சொல்லி முடியுங்கள்" என்றார் அம்மா. 'உங்கள் காதல் கதையை' என்று சொன்னபோது 'உங்கள்' என்ற வார்த்தைக்கு அவர் கொடுத்த அழுத்தம் பொருள் பொதிந்தது என்று எனக்குத் தோன்றியது.

அப்பா விடவில்லை. "இது என் காதல் கதை இல்லை என்று நான் எத்தனை தடவை சொல்வது?" என்றார்.

"கடவுளே!" என்றார் அம்மா. அதற்கு மேல் வேறு ஏதாவது சொன்னால் அப்பா அதைப் பிடித்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்தது போல் பேசாமல் இருந்தார்.

"ஒரு நாள் அவளுடைய நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது. எடுத்துப் பார்த்தால் அது ஒரு காதல் கடிதம்" என்று நிறுத்திய அப்பா, "யார் எழுதியது என்று கேட்க மாட்டாயா?" என்று மீண்டும் அம்மாவைச் சீண்டினார்.

அம்மா பேசாமல் இருந்தார். அப்பா அம்மாவின் மௌனத்தை ஒரு நிமிடம் ரசித்து விட்டுப் பிறகு தொடர்ந்தார். "குமார் என்று ஒரு பையன் ராதிகாவுக்கு எழுதிய கடிதம் அது."

"யார் அந்தக் குமார்?"

"இதைத் தான் நானும் ராதிகாவிடம் கேட்டேன். நீயும் நானும் எப்படி ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறோம் பார்!"

"ஏன் உங்களுக்கு அவனைத் தெரியாதா?"

"ஆச்சரியம். ராதிகா என்னிடம் கேட்ட அதே கேள்வியை நீயும் கேட்கிறாயே? 'எனக்குத் தெரியாது' என்றேன். 'என்னங்க இது? அவனும் நம் வகுப்புதான். ஆனால் B  செக்‌ஷன்' என்றாள் ராதிகா."

"நீங்கள் இருவரும் A செக்‌ஷனாக்கும்? ஆமாம் நீங்கள் இருவரும் ஒரே வகுப்புதானே? அப்புறம் ஏன் ராதிகா உங்களை 'என்னங்க' என்று சொல்ல வேண்டும். வா போ என்று சொல்ல மாட்டாளா?"

"ஓ! ஒரு மனைவி கணவனைக் கூப்பிடுவது போல் 'என்னங்க' என்று சொன்னாளே என்று யோசிக்கிறாயா? நான் அவளுக்கு டியூஷன் வாத்தியார் என்பதால் முதலிலிருந்தே என்னை அவள் 'வாங்க போங்க' என்றுதான் கூப்பிடுவாள்"

"சரி. புராணம் போதும். கதைக்கு வாருங்கள்."

"எனக்கு B செக்‌ஷனில் படிப்பவர்களை அவ்வளவாகத் தெரியாது என்றேன்."

"A செக்‌ஷனில் படிப்பவர்களை மட்டும் நன்றாகத் தெரியுமாக்கும்?"

"மறுபடியும் ராதிகா கேட்ட அதே கேள்வியைக் கேட்கிறாயே? நீதான் ராதிகா. ராதிகாதான் நீ!"

"இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?'

"மீதிக் கதையைச் சொல்ல வருகிறேன்!" என்று அப்பா பின்வாங்கினார்."A செக்‌ஷனில் படிக்கும் குமாருக்கு B செக்‌ஷனில் படிக்கும் உன்னை எப்படித் தெரியும்?' என்று கேட்டேன்"

"எல்லாப் பையன்களும் உங்களைப் போலவே இருப்பார்களா என்று ராதிகா கேட்டிருப்பாளே!" என்றார் அம்மா கிண்டலாக.

"அப்படியேதான் கேட்டாள்? இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? நீயும் எங்கள் வகுப்பில்தான் படித்தாயா? நான்தான் உன்னை கவனிக்காமல் இருந்து விட்டேனா?"

அம்மா பதில் சொல்லவில்லை. ஆனால் அப்பா பயந்து பின்வாங்கியதிலிருந்து அம்மா அப்பாவை எப்படி முறைத்திருப்பார் என்று என்னால் ஊகிக்க முடிந்தது!

"சரி. கதைக்கு வாருங்கள். குமாரின் காதல் கடிதம் பற்றி ராதிகா என்ன சொன்னாள்? அவளும் அவனைக் காதலிப்பதாகச் சொன்னாளா?"

"அதெப்படிச் சொல்லுவாள்? அவள்தான்..."

" 'அவள்தான் என்னைக் காதலித்தாளே' என்று சொல்ல வருகிறீர்களா?" அம்மாவின் குரலில் இப்போது உண்மையாகவே கோபம் இருந்தது.

"அதெப்படிச் சொல்லுவேன்? அவள் என்னை குருவாகத்தான் மதித்தாளே தவிர என் மீது காதல் கொள்ளவில்லையே!"

"பின்னே ஏன் 'அவள்தான்..' என்று ஆரம்பித்தீர்கள்?"

"அவள்தான் கணக்கில் வீக் ஆயிற்றே என்று சொல்ல வந்தேன்."

"அவள் கணக்கில் வீக் என்பதற்கும் குமாரின் காதலை ஏற்றுக் கொள்ள முடியாததற்கும் என்ன சம்பந்தம்?"

"ஏனெனில் குமார் கணக்கில் ரொம்ப ரொம்ப வீக். அவன் சாதாரணக் கூட்டலைக் கூடத் தப்புத் தப்பாகப் போடுவதைப் பார்த்து அவன் வகுப்பில் எல்லோரும் சிரிப்பார்களாம். கணக்கில் வீக்காக இருக்கும் ராதிகா என் மாதிரி ஒரு கணக்குப் புலியை விரும்புவாளே தவிரத் தன்னை விடக் கணக்கில் வீக் ஆக இருப்பவனை எப்படி விரும்புவாள்?"

"சுற்றிச் சுற்றி எங்கே வருகிறீர்கள்?" என்றாள் அம்மா எரிச்சலுடன்.

"கோபப்படாதே. ராதிகாவின் மனம் காதலில் ஈடுபடவில்லை. அந்த வயதில் வரும் அபத்தமான காதல் எண்ணங்களைக் குமார் போல் தப்புக் கணக்குப் போடுபவர்கள்தான் பெரிதாக எடுத்துக் கொள்வார்கள்!"

"அப்புறம் ஏன் அவள் குமாரின் காதல் கடிதத்தை தன் நோட்டுப் புத்தகத்தில்  வைத்திருந்தாளாம்?"

"அந்தக் கடிதத்தில் குமார் ஒரு தப்பான கூட்டல் கணக்குப் போட்டிருந்தான். அதைத் தன் நெருங்கிய தோழிகளிடம் காட்டி ரசிப்பதற்காகத்தான் அதை வைத்திருந்தாளாம்!"

"காதல் கடிதத்தில் கூட்டல் கழித்தல் எல்லாம் எங்கே வந்தது?"

"சொல்கிறேன். அந்தக் கடிதத்தில் அவன் எழுதி இருந்தான். 'என்காதல் நிறைவேற வேண்டும் என்று பிள்ளையார் கோவிலை இது வரை 18 முறை சுற்றி வந்து விட்டேன். இன்னும் 40 தடவை சுற்றி வந்தால் 108 முறை ஆகி விடும். அப்புறம் என் காதல் நிறைவேறி விடும்.'"

அம்மா பெரிதாகச் சிரித்தார். "இது தப்புக் கணக்கு போல் தோன்றவில்லை. ஏமாற்று வேலை போல் தோன்றுகிறது! நீங்கள் என்ன ஆலோசனை சொன்னீர்கள் உங்கள் சிஷ்யைக்கு?"

"அவளை அந்தக் கடிதத்தைக் கிழித்துப் போடச் சொன்னேன். அப்படிப்பட்ட கடிதங்களை வைத்திருப்பது ஆபத்தானது என்று சொன்னேன். அப்புறம் அவள் கிழித்துப் போடுவாளோ மாட்டளோ என்று நினைத்து நானே அதைக் கிழித்துப் போட்டு விட்டேன்."

"கதை முடிந்ததா?" என்றார் அம்மா கிண்டலாக.

"இன்னும் என்ன பாக்கி இருக்கிறது? ராதிகா யாரைக் கல்யாணம் செய்து கொண்டாள், குமார் யாரைக் கல்யாணம் செய்து கொண்டான், அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்காதே! எனக்குத் தெரியாது."

"பெரிய கதாசிரியர்தான் நீங்கள்! காதல் கதை என்று ஆரம்பித்து விட்டு, அப்புறம் காதலே இல்லை என்று சொல்லி விட்டு, மறுபடியும் காதலைக் கொண்டு வந்து...... அடேயப்பா!"

"சரி. என் கதையை நான் சொல்லி விட்டேன். உன் கதையை நீ சொல்ல வேண்டாமா?"

"என்னிடம் இது போல் காதல் கதைகள் எல்லாம் இல்லை."

"நீ கல்லூரியில் படித்தபோது பாலு என்பவன் உனக்குக் காதல் கடிதம் கொடுத்தானே, அதைப் பற்றிச் சொல்லலாமே!" என்றார் அப்பா.

அம்மா அதிர்ச்சி அடைந்தவர் போல் ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, "எனக்குக் காதல் கடிதம் கொடுத்தவன் பெயர் பாலு இல்லை, மணி"  என்றார்.

"அவன் பெயர் பாலசுப்ரமணியன் என்று இருந்திருக்கும். நான் பெயரின் முதல் பகுதியைச் சொன்னேன். நீ கடைசிப் பகுதியைச் சொல்கிறாய்!"

"இந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்? என் வீட்டில் யாராவது சொன்னார்களா என்ன?"

"யாரும் சொல்லவில்லை. உன்னைப் போல் அழகான பெண்ணுக்கு யாராவது ஒருவன் காதல் கடிதம் கொடுத்திருப்பான் என்ற ஊகத்தில்தான் கேட்டேன்!"

"நான் அழகாக இருப்பதாக இது வரை நீங்கள் என்னிடம் சொன்னதில்லையே?"

"கல்யாணம் ஆன புதிதில் சொல்லி இருக்கிறேனே, அதை மறந்து விட்டாயா?"

"அப்புறம் ஏன் சொல்லவில்லை?"

"தேவைப்பட்டால் ஒழியப் பொய் சொல்லக்கூடாது என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.  இரு, இரு! கோபித்துக் கொள்ளாதே. நான் உன்னைப் பற்றிச் சொன்னது எதுவுமே பொய் இல்லை.  உன் கதைக்கு வருவோம். மணி என்பவன் காதல் கடிதம் கொடுத்தான். அப்புறம் என்ன ஆயிற்று அவன் கதை?"

அம்மா இன்னும் கோபம் தணியாமல் மௌனமாகவே இருந்தார். அப்பா தொடர்ந்து, "கல்யாணப் பரிசு திரைப்படத்தில் சரோஜா தேவி செய்தது போல உன் கல்லூரி முதல்வரிடம் சொல்லி இருப்பாய். அவரும், திரைப்படத்தில் கல்லூரி முதல்வர் ஜெமினி கணேசனைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றியது போல் மணியை வெளியேற்றி இருப்பார். அப்படித்தானே?"

"நான் அப்படியெல்லாம் செய்யவில்லை. கடிதத்தைக் கொண்டு போய் என் அப்பாவிடம் கொடுத்தேன்."

"அவர் என்ன செய்தார்?"

"பொறுமையாகக் கடிதத்தைப் படித்துப் பார்த்து விட்டு, 'இதெல்லாம் வயசுக் கோளாறு. அந்தப் பையனைத் திரும்பியே பார்க்காமல் உன் வேலையைப் பார். அவன் தானாகவே ஒதுங்கி விடுவான்' என்றார். அப்படியே செய்தேன். அவனும் அப்பா சொன்னது போலத் தானாகவே ஒதுங்கி விட்டான்."

"உன் அப்பா கிரேட்!" என்றார் அப்பா.

"என் அப்பாவாயிற்றே?" என்றார் அம்மா.

"என்னை உனக்குக் கணவனாகத் தேர்வு செய்தாரே அதற்காகச் சொன்னேன்!"

அம்மா எதுவும் பதில் சொல்வதற்கு முன், "ஒவ்வொரு அப்பாவும் ஒவ்வொரு விதம். எத்தனை விதமான அப்பாக்கள்! அப்பப்பா!" என்று முடித்தார் அப்பா.

Friday, May 15, 2015

3. தொலைக்காட்சிப் பெட்டியும் தொலைநோக்குப் பார்வையும்

ஒரு வீட்டு உபயோகப் பொருள் வாங்குவது என்றால் அப்பாவுக்கு அது ஒரு பிராஜக்ட்! அதாவது திட்டமிட்டுச் செய்ய வேண்டிய ஒரு பணி. நினைத்தால் உடனே வாங்கி விடுவது என்ற பழக்கம் அவரிடம் இல்லை.

இப்போது எங்கள் தலைமுறையில், நினைத்தால் உடனே போய் ஒரு கைபேசியை வாங்கிக் கொண்டு வருவது,  அப்புறம் 'ஏன் இதை வாங்கினோம், வேறு மாடலை வாங்கி இருக்கலாமே!' என்று நினைத்து வருந்துவது என்றெல்லாம் நடக்கும்போது, அப்பாவின் அணுகுமுறை என் நினைவுக்கு வரும்.

அதை என் போன்றோரால் பின்பற்ற முடியாது என்பது வேறு விஷயம். ஏன் என்று கேட்டு விடாதீர்கள். என்னால் காரணம் சொல்ல முடியாது. அப்பா அப்பாதான்! அவர் காலத்திலேயே அவர் போலத் திட்டமிட்டு வாங்கியவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்திருப்பார்கள். அவசரமாக எதையாவது வாங்கி விட்டு வீட்டில் திட்டு வாங்கியவர்கள்தான் அதிகம் இருந்திருப்பார்கள்!

அப்பா எப்போதுமே அவசரப்பட மாட்டார். உதாரணமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவது என்று முடிவு செய்தால், உடனே கடைக்குப் போய் வாங்கி விட மாட்டார். முதலில் பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து என்னென்ன மாடல்கள் உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன என்றெல்லாம் பார்ப்பார்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகைகளில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான  விளம்பரங்கள் அதிகம் வரும் என்பதால் அவற்றை விரிவாகப் படிப்பார். சில கடைகளுக்கு ஃபோன் செய்து விசாரிப்பார்.

பெரும்பாலான கடைகளில் "நேர்ல வாங்க சார். விவரமா சொல்றோம்" என்று சொல்லி வெட்டி விட்டு விடுவார்கள். ஆயினும் இதனால் அப்பா சோர்வடைந்து விட மாட்டார். வேறொரு கடைக்கு ஃபோன் செய்வார்.

விளம்பரங்களை எங்களிடம் காட்டி எந்த மாடல் நமக்கு உகந்தது என்று கருத்துக் கேட்பார். நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்வார். சில வசதிகள் நமக்குத் தேவைதானா என்று விவாதிப்பார்.

நாங்கள் புதிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்குவது என்று முடிவு செய்தபோது இப்படித்தான் நடந்தது.

அம்மா முதலிலேயே சொன்னார். "டிவி வாங்குவதுன்னு இன்னிக்குத்தானே முடிவு பண்ணியிருக்கோம்? உங்க அப்பா ஆராய்ச்சி பண்ணி டிவி வாங்குவதற்குள் ஒரு மாதம் ஆகி விடும்!"

அப்போது படத்துக்குள் படம் (picture in picture) என்று ஒரு வசதி சில தொலைக்காட்சி மாடல்களில் இடம் பெற்றிருந்தது. அது ஒரு கவர்ச்சியான அம்சம் என்பதால் பலர் அந்த மாடல்களை விரும்பி வாங்கினர்

என்அக்கா கூட, "அப்பா! இது ரொம்ப நல்லா இருக்குப்பா. இதை வாங்கலாம்" என்றாள். அப்பா கொஞ்சம் யோசித்து விட்டு, "இது பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் நமக்கு உபயோகமாக இருக்குமா? ஏதோ கொஞ்ச நேரம் சுவாரசியமாக இருக்கும். அப்புறம் அலுப்புத் தட்டி விடும். ஒரே நேரத்தில் இரண்டு சானல்கள் பார்க்கலாம் என்று வைத்துக் கொண்டால் கூடப் பெட்டிக்குள் இருக்கும் காட்சி மிகச் சிறிதாக இருக்கும். அதோடு ஆடியோ ஒரு சானலில்தான் கேட்க முடியும்" என்று சொன்னார்.

அக்காவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அப்பா சொல்வதை ஏற்றுக்கொண்டு விட்டாள்.

அதுபோல் கம்ப்யூட்டராகவும் செயல் படக்கூடிய டூ இன் ஒன் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று புதிதாக அறிமுகப்பட்டிருந்தது. சிறுவனான எனக்கு அதில் ஆர்வம் இருந்தது.

அப்போது  வீடுகளில் கம்ப்யூட்டர் வைத்துக்கொள்ளும் வசதி வரவில்லை. பெரிய ஸ்க்ரீன்  கொண்ட அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் வீட்டுக் கணக்குப் போடுவது, விளையாட்டுக்கள் விளையாடுவது என்ற விஷயங்களைக் கடையில் டெமோவில் பார்த்தபோது நாங்கள் எல்லோருமே பிரமித்து விட்டோம்.

விலை சற்று அதிகம் இருந்தாலும் அதையே வாங்கலாம் என்றார் அம்மா. "என்ன சார், ஆயிரம் ரூபாய் கட்டி புக் பண்ணிக்கிறீங்களா? வீட்டுல கொண்டு வச்சு டெமோ காட்டறோம். அப்ப மீதிப் பணத்தைக் கொடுத்தாப் போதும். இன்ஸ்டால்மென்ட் வசதி கூட இருக்கு" என்றார் கடை ஊழியர்.

"இல்லை. மறுபடி வருகிறோம்." என்று சொல்லி விட்டு வெளியே வந்து விட்டார் அப்பா.

வீட்டுக்குப் போனதும் அப்பா ரொம்ப நேரம் யோசித்தார். அப்பாவுக்கும் இந்த மாடல் பிடித்து விட்டது போலிருக்கிறது என்று நினைத்து அதை வாங்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன்.

அப்பா தன் முடிவை அடுத்த நாள்தான் சொன்னார். 

"கண்ணா! நீ இந்த டிவியை வாங்க ஆசைப்படறேன்னு எனக்குத் தெரியும். ஆனா இந்த மாதிரி டூ இன் ஒன் எந்த அளவுக்கு சரியா வரும்னு எனக்குத் தெரியல. டேப் ரிகார்டர் கம் ரேடியோ என்கிற டூ இன் ஒன் வேறே. அதில ரெண்டுமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது. ஆனா டிவி வேற, கம்ப்யூட்டர் வேற. ரெண்டையும் ஓரே  பொட்டிக்குள்ள வச்சுப் பயன்படுத்தறது நமக்குச் சரியா வராதுன்னு நெனைக்கறேன். நீ பெரியவனா ஆறதுக்குள்ள கம்ப்யூட்டர்ல நிறைய முன்னேற்றங்கள் வரும். கம்ப்யூட்டரைத் தனியா வாங்கிப் பயன்படுத்தற வசதி வரும். அதனால இந்த டிவி கம் கம்ப்யூட்டர் வேண்டாம்னு நினைக்கிறேன்" என்றார்.

"பையன் ஆசைப்படறான். வாங்கிக் குடுங்களேன்" என்றார் அம்மா.

"இல்லேம்மா. அப்பா சொல்றது சரிதான்னு எனக்குத் தோணுது" என்றேன் நான்.

"நீங்கள் எல்லாம் என்னைப் புரிஞ்சுக்கறதுதான் எனக்குப் பெரிய பலம்" என்றார் அப்பா.

அவர் கணித்தது போலவே கணிப்பொறித் தொலைக்காட்சி கொஞ்ச நாட்களில் காணாமல் போனது. அந்த மாடலை வாங்கியவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.

இதன் பிறகு பல மாடல்களைப் பார்த்த பிறகு சரௌண்ட் சவுண்ட் என்று புதிதாக வந்த மாடலை நாங்கள் அனைவரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தோம். 

"இதை விட நவீன மாடல்கள் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் சரௌண்ட் சவுண்ட் என்ற வசதி எப்போதும் காலாவதியாயாகாது" என்றார் அப்பா.

அம்மா சொன்னது போலவே, நாங்கள் தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடிவு செய்ததிலிருந்து ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்து  வாங்குவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி விட்டது!

அப்பா சொன்னது போலவே அந்த சரௌண்ட் சவுண்ட் வசதி கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி பல வருடங்கள் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.