Friday, May 15, 2015

3. தொலைக்காட்சிப் பெட்டியும் தொலைநோக்குப் பார்வையும்

ஒரு வீட்டு உபயோகப் பொருள் வாங்குவது என்றால் அப்பாவுக்கு அது ஒரு பிராஜக்ட்! அதாவது திட்டமிட்டுச் செய்ய வேண்டிய ஒரு பணி. நினைத்தால் உடனே வாங்கி விடுவது என்ற பழக்கம் அவரிடம் இல்லை.

இப்போது எங்கள் தலைமுறையில், நினைத்தால் உடனே போய் ஒரு கைபேசியை வாங்கிக் கொண்டு வருவது,  அப்புறம் 'ஏன் இதை வாங்கினோம், வேறு மாடலை வாங்கி இருக்கலாமே!' என்று நினைத்து வருந்துவது என்றெல்லாம் நடக்கும்போது, அப்பாவின் அணுகுமுறை என் நினைவுக்கு வரும்.

அதை என் போன்றோரால் பின்பற்ற முடியாது என்பது வேறு விஷயம். ஏன் என்று கேட்டு விடாதீர்கள். என்னால் காரணம் சொல்ல முடியாது. அப்பா அப்பாதான்! அவர் காலத்திலேயே அவர் போலத் திட்டமிட்டு வாங்கியவர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்திருப்பார்கள். அவசரமாக எதையாவது வாங்கி விட்டு வீட்டில் திட்டு வாங்கியவர்கள்தான் அதிகம் இருந்திருப்பார்கள்!

அப்பா எப்போதுமே அவசரப்பட மாட்டார். உதாரணமாக ஒரு தொலைக்காட்சிப் பெட்டி வாங்குவது என்று முடிவு செய்தால், உடனே கடைக்குப் போய் வாங்கி விட மாட்டார். முதலில் பத்திரிகை விளம்பரங்களைப் பார்த்து என்னென்ன மாடல்கள் உள்ளன, அவற்றின் சிறப்புகள் என்ன என்றெல்லாம் பார்ப்பார்.

குறிப்பாக வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைப் பத்திரிகைகளில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான  விளம்பரங்கள் அதிகம் வரும் என்பதால் அவற்றை விரிவாகப் படிப்பார். சில கடைகளுக்கு ஃபோன் செய்து விசாரிப்பார்.

பெரும்பாலான கடைகளில் "நேர்ல வாங்க சார். விவரமா சொல்றோம்" என்று சொல்லி வெட்டி விட்டு விடுவார்கள். ஆயினும் இதனால் அப்பா சோர்வடைந்து விட மாட்டார். வேறொரு கடைக்கு ஃபோன் செய்வார்.

விளம்பரங்களை எங்களிடம் காட்டி எந்த மாடல் நமக்கு உகந்தது என்று கருத்துக் கேட்பார். நாங்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்வார். சில வசதிகள் நமக்குத் தேவைதானா என்று விவாதிப்பார்.

நாங்கள் புதிய தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று வாங்குவது என்று முடிவு செய்தபோது இப்படித்தான் நடந்தது.

அம்மா முதலிலேயே சொன்னார். "டிவி வாங்குவதுன்னு இன்னிக்குத்தானே முடிவு பண்ணியிருக்கோம்? உங்க அப்பா ஆராய்ச்சி பண்ணி டிவி வாங்குவதற்குள் ஒரு மாதம் ஆகி விடும்!"

அப்போது படத்துக்குள் படம் (picture in picture) என்று ஒரு வசதி சில தொலைக்காட்சி மாடல்களில் இடம் பெற்றிருந்தது. அது ஒரு கவர்ச்சியான அம்சம் என்பதால் பலர் அந்த மாடல்களை விரும்பி வாங்கினர்

என்அக்கா கூட, "அப்பா! இது ரொம்ப நல்லா இருக்குப்பா. இதை வாங்கலாம்" என்றாள். அப்பா கொஞ்சம் யோசித்து விட்டு, "இது பார்ப்பதற்குக் கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் நமக்கு உபயோகமாக இருக்குமா? ஏதோ கொஞ்ச நேரம் சுவாரசியமாக இருக்கும். அப்புறம் அலுப்புத் தட்டி விடும். ஒரே நேரத்தில் இரண்டு சானல்கள் பார்க்கலாம் என்று வைத்துக் கொண்டால் கூடப் பெட்டிக்குள் இருக்கும் காட்சி மிகச் சிறிதாக இருக்கும். அதோடு ஆடியோ ஒரு சானலில்தான் கேட்க முடியும்" என்று சொன்னார்.

அக்காவுக்குக் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும் அப்பா சொல்வதை ஏற்றுக்கொண்டு விட்டாள்.

அதுபோல் கம்ப்யூட்டராகவும் செயல் படக்கூடிய டூ இன் ஒன் தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று புதிதாக அறிமுகப்பட்டிருந்தது. சிறுவனான எனக்கு அதில் ஆர்வம் இருந்தது.

அப்போது  வீடுகளில் கம்ப்யூட்டர் வைத்துக்கொள்ளும் வசதி வரவில்லை. பெரிய ஸ்க்ரீன்  கொண்ட அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியில் வீட்டுக் கணக்குப் போடுவது, விளையாட்டுக்கள் விளையாடுவது என்ற விஷயங்களைக் கடையில் டெமோவில் பார்த்தபோது நாங்கள் எல்லோருமே பிரமித்து விட்டோம்.

விலை சற்று அதிகம் இருந்தாலும் அதையே வாங்கலாம் என்றார் அம்மா. "என்ன சார், ஆயிரம் ரூபாய் கட்டி புக் பண்ணிக்கிறீங்களா? வீட்டுல கொண்டு வச்சு டெமோ காட்டறோம். அப்ப மீதிப் பணத்தைக் கொடுத்தாப் போதும். இன்ஸ்டால்மென்ட் வசதி கூட இருக்கு" என்றார் கடை ஊழியர்.

"இல்லை. மறுபடி வருகிறோம்." என்று சொல்லி விட்டு வெளியே வந்து விட்டார் அப்பா.

வீட்டுக்குப் போனதும் அப்பா ரொம்ப நேரம் யோசித்தார். அப்பாவுக்கும் இந்த மாடல் பிடித்து விட்டது போலிருக்கிறது என்று நினைத்து அதை வாங்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன்.

அப்பா தன் முடிவை அடுத்த நாள்தான் சொன்னார். 

"கண்ணா! நீ இந்த டிவியை வாங்க ஆசைப்படறேன்னு எனக்குத் தெரியும். ஆனா இந்த மாதிரி டூ இன் ஒன் எந்த அளவுக்கு சரியா வரும்னு எனக்குத் தெரியல. டேப் ரிகார்டர் கம் ரேடியோ என்கிற டூ இன் ஒன் வேறே. அதில ரெண்டுமே ஒண்ணுக்கொண்ணு தொடர்புடையது. ஆனா டிவி வேற, கம்ப்யூட்டர் வேற. ரெண்டையும் ஓரே  பொட்டிக்குள்ள வச்சுப் பயன்படுத்தறது நமக்குச் சரியா வராதுன்னு நெனைக்கறேன். நீ பெரியவனா ஆறதுக்குள்ள கம்ப்யூட்டர்ல நிறைய முன்னேற்றங்கள் வரும். கம்ப்யூட்டரைத் தனியா வாங்கிப் பயன்படுத்தற வசதி வரும். அதனால இந்த டிவி கம் கம்ப்யூட்டர் வேண்டாம்னு நினைக்கிறேன்" என்றார்.

"பையன் ஆசைப்படறான். வாங்கிக் குடுங்களேன்" என்றார் அம்மா.

"இல்லேம்மா. அப்பா சொல்றது சரிதான்னு எனக்குத் தோணுது" என்றேன் நான்.

"நீங்கள் எல்லாம் என்னைப் புரிஞ்சுக்கறதுதான் எனக்குப் பெரிய பலம்" என்றார் அப்பா.

அவர் கணித்தது போலவே கணிப்பொறித் தொலைக்காட்சி கொஞ்ச நாட்களில் காணாமல் போனது. அந்த மாடலை வாங்கியவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்திருக்கக் கூடும்.

இதன் பிறகு பல மாடல்களைப் பார்த்த பிறகு சரௌண்ட் சவுண்ட் என்று புதிதாக வந்த மாடலை நாங்கள் அனைவரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தோம். 

"இதை விட நவீன மாடல்கள் எதிர்காலத்தில் வரலாம். ஆனால் சரௌண்ட் சவுண்ட் என்ற வசதி எப்போதும் காலாவதியாயாகாது" என்றார் அப்பா.

அம்மா சொன்னது போலவே, நாங்கள் தொலைக்காட்சிப் பெட்டி வாங்க முடிவு செய்ததிலிருந்து ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்து  வாங்குவதற்குக் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகி விட்டது!

அப்பா சொன்னது போலவே அந்த சரௌண்ட் சவுண்ட் வசதி கொண்ட தொலைக்காட்சிப் பெட்டி பல வருடங்கள் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது.

Friday, May 8, 2015

2. இளநீர்

அப்பா எப்போதுமே பார்ப்பதற்கு எளிமையாக இருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் எவருமே அவர் வசதியற்ற, அதிகம் படிக்காத, ஒரு சாதாரண மனிதர் என்றுதான் நினைப்பார்கள். 

எப்போதுமே ஆங்கிலத்தில் பேசும் பழக்கம் உள்ளவர்கள் கூட அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியாதோ என்று நினைத்து அவரிடம் தமிழில் பேசுவார்கள். அவர்களுக்கு பதில் கூறும்போது,  அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசித் தனக்கு ஆங்கிலம் தெரியும் என்று காட்டிக்கொள்ள அப்பா எப்போதுமே முயற்சி செய்ததில்லை.

அப்போது நான் சிறு பையன். அப்பாவோடு அவரது நண்பரைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அப்பாவின் நண்பர் சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு தொழிற்பேட்டையில் ஒரு தொழிற்சாலை நடத்திக் கொண்டிருந்தார்.

அப்பாவின் நண்பரின் தொழிற்சாலைக்கு உள்ளே சென்று அவரது அறை இருக்கும் பகுதிக்கு வந்தபோது, அங்கே இருந்த ஒரு பியூன் அப்பா ஏதோ நன்கொடை கேட்க வந்திருப்பாரோ என்று நினைத்தது போல் அப்பாவிடம் வெகு அலட்சியமாக நடந்து கொண்டார்.

வயதில் பெரியவரான அப்பாவை 'வா, போ' என்று மரியாதையில்லாமல் பேசினார்.  

"சார் ஃபோன்ல பேசிக்கிட்டிருக்கார். கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு" என்றவர் எங்களை உட்காரக் கூடச் சொல்லவில்லை. அங்கே நாற்காலிகள் இருந்தும் அப்பா உட்காராமல் நின்று கொண்டிருந்தார்.

சற்று நேரம் கழித்து அப்பாவின் நண்பர் அவரது அறையிலிருந்து வெளியே வந்தார். அப்பாவைப் பார்த்து உற்சாகத்துடன், "வாடா! எப்ப வந்தே?" என்றார்.

 அப்பா, "என்னடா, சி எம்மைக் கூடப் பாத்துடலாம் போலிருக்கு! உன்னைப் பார்க்க முடியாது போலிருக்கே?" என்றார்.

"ஏன் ரொம்ப நேரமா வெயிட் பண்றீங்களா என்ன?" என்றார் நண்பர்.

 "இல்லை, இப்பத்தான் உள்ளே நுழையறோம். சும்மாதான் சொன்னேன்" என்றார் அப்பா.

உள்ளே போய் உட்கார்ந்ததும், "என்ன சாப்பிடறே? காப்பி சொல்லட்டுமா? பையனுக்கு வேணும்னா ஜூஸ் கொண்டு வரச் சொல்றேன்" என்றார் அவர்.

"பரவாயில்லை. நான் காப்பி சாப்பிடறதில்லை" என்றார் அப்பா.

"வேறே என்ன சாப்பிடுவே?"

"பரவாயில்லை விடுடா!"

"சொல்லுடா!" என்றார் நண்பர் விடாமல்.

"நான் இளநீர்தான் சாப்பிடுவேன். அது இங்கே கிடைக்காது போலிருக்கே! இது சீஸன் வேறே இல்லை" என்றார் அப்பா.

"அதைப்பத்தி உனக்கென்ன? நான் வாங்கிக்கிட்டு வரச் சொல்றேன்" என்ற நண்பர், பியூனை அழைத்து, "மூணு இளநீர் வாங்கிக்கிட்டு வா" என்றார்.

"சார், பக்கத்தில எங்கேயும் இளநீர் கிடைக்காதே!"

"எங்கே கிடைக்குமோ அங்கே போய் வாங்கிட்டு வா."

அரைமணி நேரம் கழித்து இளநீர் வந்தது. பியூனின் முகத்தில் வழிந்த வியர்வை அவர் வெகு தூரம் போய் அலைந்திருப்பார் என்று காட்டியது.
சற்று நேரம் நண்பரிடம் பேசி விட்டு விடை பெற்று வெளியே வந்தோம்.

வெளியே நின்று கொண்டிருந்த பியூன் அப்பாவைச் சற்று தர்மசங்கடத்துடன் பார்த்தார். அப்பா அவரிடம், "இளநீர் ரொம்ப நல்லா இருந்தது" என்று சொல்லி விட்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை எடுத்து அவரிடம் கொடுத்தார். "நீயும் ஒரு இளநீர் சாப்பிடு!" என்று சொல்லி விட்டு வெளியே நடந்தார்.

வெளியே வந்ததும், அப்பாவிடம், "அப்பா! உனக்குத்தான்* காப்பி பிடிக்குமே? ஏன் காப்பி சாப்பிட மாட்டேன்னு சொன்னே?" என்றேன்.

"அந்த பியூனுக்கு நான் அவன் முதலாளிக்கு எவ்வளவு நெருக்கம்னு காட்டறதுக்காகத்தான் அப்படிச் சொன்னேன். காப்பி என்றால் பக்கத்தில் எங்காவது ஓட்டலிலிருந்து வாங்கிக்கொண்டு வந்திருப்பான். வரும்போதே கவனித்தேன். இளநீர்க்கடை எதுவுமே கண்ணில் படவிலை. அதனால்தான் கொஞ்சம் அலையட்டும்னு இளநீர் கேட்டேன்" என்றார் அப்பா.

"அப்புறம் ஏன் அவருக்கு அம்பது ரூபாய் குடுத்தே?"

"பாவம். இவ்வளவு தூரம் அலஞ்சிருக்கானே அதுக்காகத்தான். அந்தப் பணத்தில் அவன் இளநீர் வாங்க மாட்டான். அவனைப் பார்த்தா குடிப்பழக்கம் இருக்கிறவன் மாதிரி தெரியலே. அதனால் அந்தப் பணம் அநேகமா அவன் குடும்பத்துக்குப் போகலாம். குழந்தை இருந்தால் பிஸ்கட், சாக்லேட் ஏதாவது வாங்கிக் குடுப்பான்" என்றார் உலகம் அறிந்த அப்பா.

*அப்பாவை 'வா போ' என்று அழைப்போர் உண்டு, 'வாங்க போங்க' என்று அழைப்போரும் உண்டு. இந்த அப்பா, தன் பிள்ளைகள் தன்னை 'வா போ' என்று அழைப்பதையே விரும்புவார்!


Thursday, May 7, 2015

1. யாரப்பா இவர்?

'அப்பா கதைகள்' என்ற தலைப்பைப் படிக்கும்போது இந்தக் 'கதைகள்' குறித்துப் பலவித யூகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

1) 'அப்பா' என்ற புனைபெயரைக் கொண்டவர் எழுதிய கதைகள்

2) அப்பா சொன்ன கதைகள் (யாருடைய அப்பா? இந்த வலைப் பதிவை எழுதுபவரின் அப்பாவாக இருக்கலாம்!)

3) அமரர் தேவன் 'மல்லாரி ராவ் கதைகள்' என்று ஒரு தொடரை எழுதினார். அதுபோல், இது 'அப்பா' என்ற பெயர் உடையவரை(அப்பாசாமி, அப்பாத்துரை, அப்பாராவ் போன்ற ஒரு பெயரின் சுருக்கமாக இருக்கலாம்)ப் பற்றிய கதைகளாக இருக்கலாம்.

4 (அடே) 'அப்பா!' என்று வியக்க வைக்கும் கதைகள்

5) (போதும்) 'அப்பா' என்று அலுக்க வைக்கும் கதைகள்

6) பல்வேறு அப்பாக்களின் கதைகள்

இதற்கு மேலும் கற்பனை செய்வது உங்கள் திறமை.

இந்தப் பதிவில் இடம் பெறப் போகும் கதைகள் மேற்கண்ட எந்த வகையையும் சேர்ந்த கதைகள் இல்லை என்று சொல்லலாம். மேற்கண்ட எல்லா வகைகளையும் உள்ளடக்கிய கதைகள் என்றும் சொல்லலாம்.

இந்தக் கதைகள் ஒரு கற்பனை அப்பாவைப் பற்றியவை.  இந்தக் கதைகளில் வரப்போகும் அப்பா என் அப்பா இல்லை. ஒரு அப்பாவி அப்பாவாகிய நானும் இல்லை.  வேறு எவர் அப்பாவும் இல்லை.

இந்த அப்பா நேர்மை, அறிவுக் கூர்மை, அன்பு, இரக்கம், தெளிவு, பொறுமை போன்ற பல்வகை நற்பண்புகள் நிறைந்த ஒரு அப்பா. அத்துடன் சாமர்த்தியம் மிகுந்தவர். ஒரு ஸ்மார்ட் (smart) அப்பா. இவரிடம் சில சமயம் உங்கள் அப்பாவின் சாயல் தோன்றலாம். உங்கள் சாயல் கூடத் தோன்றலாம்!

ஒரு அப்பா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று போதனை செய்வது இந்தக் கதைகளின் நோக்கம் இல்லை. சில சமுதாய நிகழ்வுகளையும் அவற்றை இந்த அப்பா எப்படி எதிர் கொள்கிறார் என்பதையும் சற்றே நகைச் சுவையுடன் விவரிக்கும் ஒரு முயற்சி தான் இது.

'முயற்சி திருவினையாக்கும் என்பது என் அப்பனின் வாக்கு' என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்!