Sunday, April 23, 2017

8. அப்பாவின் நண்பர்

"இந்த வருஷம் விளைச்சல் ரொம்பக் கம்மிங்க" என்றார் சரவணன், எங்கள் விளைநிலங்களின் குத்தகைக்காரர்.

"ஆமாம். அதுதான்  மழையே பெய்யலியே!...சரி. எவ்வளவு நெல்லு தர முடியும்  உன்னால?" என்றார் அப்பா.

"முப்பது மூட்டை கொடுத்துடறேன். அதுவே ரொம்பக் கஷ்டம்தான். எனக்கு எதுவும் மிஞ்சாது" என்றார் சரவணன் மென்று விழுங்கியபடியே.

அப்பா எதுவும் சொல்லவில்லை. சரவணன் சொன்னதை ஏற்றுக் கொண்டாரா அல்லது தனது அதிருப்தியைத் தன் மௌனத்தின் மூலம் காட்டிக் கொண்டாரா என்று எனக்குப் புரியவில்லை.

அறுவடை முடிந்ததும் முப்பது நெல் மூட்டைகளை வண்டியில் கொண்டு வந்து போட்டார் சரவணன்.

கடைசி மூட்டையை இறக்குமுன், அப்பா "அதை இறக்க வேண்டாம். அதை நீயே எடுத்துக்கிட்டுப் போயிடு" என்றார்.

"எதுக்குங்க?"

"உனக்கு ஒண்ணுமே மிஞ்சலேன்னு சொன்னியே! ஒரு மூட்டையாவது இருக்கட்டும்" என்றார் அப்பா.

அப்பா இரக்கமில்லாமல் நடந்து கொள்வதாக எனக்குப் பட்டது. ஒன்று, பேசாமல் மூட்டைகளை வாங்கி வைத்திருக்க வேண்டும். அல்லது ஐந்தாறு மூட்டைகளையாவது கொடுத்திருக்க வேண்டும். இப்படி ஒரே ஒரு மூட்டையைத் திருப்பிக் கொடுத்து சரவணனை அவமானப்படுத்துகிறாரே!

சரவணன் எதுவும் பேசாமல் ஒரு மூட்டையைத் திரும்ப எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

 இது இங்கே முடியவில்லை. இதற்குப் பிறகு,  ஒவ்வொரு மாதமும் ஒரு மூட்டை நெல்லை சரவணனுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார் அப்பா!

சில மாதங்கள் கழித்து,"ஏம்ப்பா இப்படி  மாசத்துக்கு ஒரு மூட்டை கொடுப்பதை விட அன்னிக்கே 12 மூட்டை  கொடுத்திருந்தால் அவருக்கு உபயோகமா இருந்திருக்குமே!" என்றேன் நான்.

"சரவணன் தனக்கு எதுவுமே மிஞ்சலேன்னு சொன்னதும் நான் ரொம்ப வருத்தப்பட்டேன். சரவணன் என்னிக்குமே பொய்  சொன்னதில்லை, நம்மளை ஏமாத்தினதும் இல்லை. அவன் நமக்குக் கொடுக்கற நெல்லில் ஒரு பகுதியை அவனுக்குக் கொடுக்கணும்னு அப்பவே தீர்மானிச்சுட்டேன். மொத்தத்தையும் அன்னிக்கே கொடுத்திருந்தா சாப்பாட்டுக்கு ஒண்ணு ரெண்டு மூட்டைகளை வச்சுக்கிட்டு மீதியை அப்பவே வித்திருப்பான். பின்னால அவனுக்கு சாப்பாட்டுக்கு நெல் இருந்திருக்காது. அன்னிக்கு அவனுக்கு நல்ல விலையும் கெடைச்சிருக்காது. அதனாலதான் மாசம் ஒரு மூட்டையாக கொடுத்தேன். அதோட அவன் வீட்டில நெல் இருந்தா அதில பாதியை எலிகள் தின்னுடும்!"

சரவணனிடம் அப்பாவுக்கு இருந்த பாசம் அப்போதுதான் எனக்கு முதலில் புரிந்தது.

ங்கள் கிராமத்தில் அந்த நாளில் இருந்த ஜாதி வழக்கப்படி சரவணன் எங்கள் வீட்டுக்குள் நுழைய முடியாது. அப்பா வாசல் திண்ணையில் உட்கார்ந்திருக்க, சரவணன் வீட்டு வாசலிலேயே நின்று பேசி விட்டுப் போவார். சில சமயம் வீட்டுக்குப் பின்பக்கம் வருவார். அப்போது அப்பாவும் பின்கட்டுக்கு வருவார். இருவரும் தோட்டத்தில் நின்றோ அமர்ந்தோ பேசிக்கொண்டிருப்பார்கள்.

பல சமயம் அம்மா சரவணனுக்குச் சாப்பிட ஏதாவது கொடுப்பார். சரவணன் தோட்டத்திலேயே மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிடுவார். அவர் வீட்டுக்குப் போகும்போது அம்மா பலகாரங்களை இலையில் சுற்றிப் பொட்டலம் கட்டி "வீட்டுக்காரிக்கும் குழந்தைக்குகளுக்கும் குடுங்க" என்று சொல்லிக் கொடுப்பார்.

ஒருமுறை அப்பாவிடம், "ஏம்ப்பா அவரை வீட்டுக்குள்ள உக்கார வச்சு சாப்பிடச் சொல்லலாமே!" என்று கேட்டேன். "எனக்கும் அதுதான் ஆசை" என்றார் அப்பா.

அந்த வயதில் அப்பா சொன்னதன் பொருள் எனக்கு விளங்கவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகுதான் அப்பாவுக்கும் சரவணன் மாமாவுக்கும் (மாமா என்று அவரை நான் வெளிப்படையாக அழைத்திருந்தால், ஊரில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்திருப்பார்கள்!) இருந்த நட்பும், ஜாதிக்கட்டுப்பாடுகள் ஏற்படுத்திய தடைகளும், அவற்றை மீறி அப்பா தன் நண்பர் மீது தான் வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்தியதும், பழைய வழக்கங்களைப் பெருமளவில் கடைப்பிடிக்கும் அம்மா அப்பாவின் மனதைப் புரிந்து கொண்டு நடந்து கொண்டதும் எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய வந்தது.

நான் பள்ளிப்படிப்பை முடிக்கும் தருவாயில் அப்பா காலமாகி விட்டார். இறப்பதற்கு ஓரிரு மாதங்கள் முன்பிருந்தே அவர் நோய்வாய்ப் பட்டிருந்தார். அவரை இழந்து விடுவோமோ என்கிற பயம் எனக்கும் அம்மாவுக்கும் முன்பே ஏற்பட்டு விட்டது. ஆயினும் எங்கள் பயம் உண்மையானபோது ஏற்பட்ட அதிர்ச்சியும் துயரமும் எங்கள் இருவரையும் உலுக்கி விட்டன.

சரவணன் மாமாவின் நிலைதான் மிகவும் பரிதாபம். வீட்டுக்குள் வந்து அப்பாவைப் பார்க்க முடியவில்லை. பின்கட்டில் நின்று கழுத்தை நீட்டி உள்ளே எட்டிப்பார்த்து அப்பாவின் முகத்தைப் பார்த்து விட முடியுமா என்று அவர் தவித்த தவிப்பு!

ஒரு கட்டத்தில் அவரை உள்ளே வரச் சொல்லி விடலாமா என்று கூட அம்மா நினைத்தார். ஆனால் வீட்டுக்குள் நண்பர்கள், உறவினர்கள் என்று யாராவது இருந்து கொண்டே இருந்ததால் அது முடியவில்லை. அம்மா வரச் சொல்லியிருந்தாலும் சரவணன் மாமா உள்ளே வந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்!

ப்பா போய் இரண்டு மாதங்கள் ஒடி விட்டன. நானும் அம்மாவும் எப்படியோ இந்தத் துயரத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்து விட்டோம். நான் பள்ளி இறுதித் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு தேர்வையும் எழுதி விட்டேன்.

ஒருநாள் அம்மா என்னை 'சத்தம் போடாதே' என்று சைகை காட்டி விட்டுப் பின்கட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார். அவர் கை காட்டிய திசையில், தோட்டத்தில் ஒரு செடிக்கு அருகே சரவணன் தலை குனிந்து நின்று கொண்டிருந்தார்.

"என்ன?" என்றேன் அம்மாவிடம் புரியாமல்.

"அப்பாவை நினைத்து அவர் இன்னும் அழுது கொண்டிருக்கிறார் பார்!" என்றாள் அம்மா.

அப்போதுதான் கவனித்தேன். சரவணன் மாமா மௌனமாக, தான் அழுவது யாருக்கும் தெரியாமல், குலுங்கக் குலுங்க அழுது கொண்டிருந்தார். தரையில் சில கண்ணீர்த் துளிகள் விழுந்து தரை ஈரமாக இருப்பதைக் கூடப்  பார்க்க முடிந்தது.

அப்பாவின் மறைவை நானும் அம்மாவும் கூட ஏற்றுக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டோம். ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகும் கூட அப்பாவின் இறப்பைத் தாங்க முடியாமல் அழுது கொண்டிருக்கிறாரே, இவரைப் பற்றி என்ன சொல்ல?

அப்பாவுக்குப் பல நண்பர்கள் உண்டு. ஆயினும் 'அப்பாவின் நண்பர்' என்று சொன்னால் என் நினைவுக்கு வருபவர் சரவணன் மாமா மட்டும்தான்.

Sunday, April 9, 2017

7. அப்பாவின் நியாயங்கள்

ஒருநாள் ஆங்கிலப் பத்திரிகையில் நான் படித்த 'டபிள் ஸ்டாண்டர்ட்ஸ்' என்ற சொற்றொடருக்கு  அர்த்தம் என்ன என்று அப்பாவிடம் கேட்டேன்.

"இரட்டை நிலை" என்றார் அம்மா முந்திக்கொண்டு.

"அப்படீன்னா?"

"தனக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்!" என்றார் அப்பா.

"அது எப்படி? நியாயம் எல்லாருக்கும் பொதுவாத்தானே இருக்கணும்?" என்றேன்.

"இருக்கணும்தான். அப்படி இல்லாட்டாதான் 'டபிள் ஸ்டாண்டர்ட்ஸ்னு' சொல்றோம்."

"அரசியல்ல இது ரொம்ப சகஜம்" என்றார் அம்மா.

"ஏன் நம்ம வீட்டிலேயே இருக்கே!" என்றார் அப்பா. "ஒருநாள் வெளியில போயிட்டு வரும்போது வீட்டுச் சாவியை ஹோட்டலிலேயே விட்டுட்டு வந்துட்டேன். 'உங்களுக்குப்  பொறுப்பே கிடையாது' ன்னு உன் அம்மாகிட்ட திட்டு வாங்கினேன்."

"அப்புறம் என்ன ஆச்சு? பூட்டை உடைச்சீங்களா?" என்றேன் ஆவலுடன்.

"பூட்டை ஏன் உடைக்கணும்? நான் ஹோட்டலுக்குத் திரும்பிப் போய்ச் சாவியை எடுத்துட்டு வந்துட்டேன். நல்ல வேளை. சாவியை ஹோட்டலில் எடுத்து வைத்திருந்தார்கள்" என்றார் அப்பா.

"அதுவரையிலும், நான் கொட்டு கொட்டுன்னு வீட்டு வாசலிலேயே உட்கார்ந்திருந்தேன்" என்றார் அம்மா.

"எவ்வளவு நேரம்? ஒரு பத்து நிமிஷம் இருக்குமா?" என்றார் அப்பா.

"பத்து நிமிஷத்துல எங்க வந்தீங்க? அரைமணி நேரம் ஆகியிருக்கும்."

"காத்துக்கிட்டிருக்கும்போது  எப்பவுமே நேரம் அதிகம் ஆகியிருக்கிற மாதிரிதான் தெரியும்!" என்றார் அப்பா விடாமல்.

"அது சரி. இதிலே டபிள் ஸ்டாண்டார்ட்ஸ் எங்கே வந்தது?" என்றேன் நான்.

"சொல்றேன்" என்றார் அப்பா. "இன்னொரு சமயம் உன் அம்மா ஷாப்பிங் போயிட்டு வரும்போது சாவியை எங்கேயோ வச்சுட்டு வந்துட்டா. நான் ஆஃபீஸ்ல இருந்தேன். உங்கம்மா எனக்கு  ஃபோன் பண்ணினா. எங்கிட்ட இன்னொரு சாவி இருந்ததனால ஆஃபீஸ்ல சொல்லிட்டு நான் சாவியை எடுத்துக்கிட்டு வந்து வீட்டைத் திறந்தேன். அப்ப உங்கம்மா ஒரு மணி நேரம் காத்துக்கிட்டிருந்திருப்பான்னு நினைக்கிறேன். இல்லையா பங்கஜம்?" என்று சிரித்துக்கொண்டே அம்மாவைப் பார்த்தார் அப்பா.

"சாவி கிடைச்சுதா இல்லியா?" என்றேன் நான் ஆவலுடன்.

"உனக்குக் கதை கேட்கிற ஆர்வம்! கிடைச்சுது. நான்தான் உங்கம்மா போன கடைகளுக்கெல்லாம் போய்த் தேடி அலைஞ்சு சாவியைக் கண்டுபிடிச்சு வாங்கிக்கிட்டு வந்தேன். தான் சாவியைத் தொலைச்சதைப் பத்தி உங்கம்மா என்ன சொன்னா தெரியுமா?"

"சாவியை மறந்து போய் எங்கேயாவது வச்சுட்டு வரது எல்லோருக்கும் சகஜம்தானேன்னு சொல்லியிருப்பாங்க" என்றேன் நான்.

"அப்படிப் போடு. உங்கம்மாவை நீ நல்லா புரிஞ்சு வச்சிருக்கியே!" என்றார் அப்பா.  அம்மா கோபப்படாமல் சிரித்தார்.

ப்பாவுக்கே டபிள் ஸ்டாண்டர்ட்ஸ் உண்டு என்பதை வேறு சில சந்தர்ப்பங்களில் புரிந்து கொண்டேன்.  இதை டபிள்  ஸ்டாண்டர்ட்ஸ் என்று சொல்வதை விட 'தனக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம்' என்று தமிழில் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். நான் இப்படிச் சொல்வதன் பொருள் என்னவென்று, இந்தச் சந்தர்ப்பங்களை நான் விவரித்ததும் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.

அப்பாவுக்கு அரசியலில் தீவிரமான கருத்துக்கள் உண்டு. வீட்டில் தன்  கருத்துக்களைச் சில சமயம் சொல்லுவார். எனக்கு அவை புரிவதில்லை. அம்மா மௌனமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்.

ஒருமுறை அம்மாவும் அப்பாவும் தேர்தலில் ஓட்டுப் போட்டு விட்டு வந்ததும் அம்மாவிடம் "அப்பா சொன்னபடிதான் நீ ஓட்டுப் போட்டாயா?" என்று கேட்டேன்.

அம்மா சொன்ன பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "நான் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என்று உன் அப்பா ஒரு தடவை கூட என்னிடம் சொன்னதில்லை. நான் யாருக்குப் போட்டேன் என்று கேட்டதும் இல்லை. அவர் தன் கருத்துக்களை வீட்டில் பேசுவதால், அவர் யாருக்கு ஓட்டுப் போட்டிருப்பார் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் யாருக்குப் போட்டேன் என்பது அவருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள அவர் விரும்பியதும் இல்லை" என்றார் அம்மா!

ஒரு முறை எங்கள் உறவினர் ஒருவர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய அரசியல் கருத்துக்கள் அப்பாவின் கருத்துக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவர் காரசாரமாகத் தன்  கருத்துக்களைப் பேசினார். அப்பா மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். சில சமயம் மரியாதைக்காக அப்பா இலேசாகத் தலையாட்டியது அவர் கருத்தை அப்பா ஏற்றுக்கொள்வது போல் கூட அவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்!

அவர் ஊருக்குப் போனதும் அப்பாவிடம் கேட்டேன். "அவர் சொன்ன கருத்துக்களை நீ ஏன் மறுத்துப் பேசவில்லை?" என்று.

"அவர் நம் விருந்தாளி. அவர் கருத்தை நான் மறுத்துப் பேசினால் அவருக்கு அது பிடிக்காமல் போகலாம். நம் வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளியை மனம் வருந்தச் செய்வது தவறு இல்லையா?" என்றார் அப்பா.

இன்னொரு முறை நாங்கள் அப்பாவின் நண்பர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தோம். அந்த நண்பரும் அப்பாவின் அரசியல் கருத்துக்களுக்கு நேர்மாறான கருத்துக்களைக் கொண்டவர் போலும்! அவர் தன் கருத்துக்களை ஆணித்தரமாக அடித்துப் பேசினார். அப்பா வாயே திறக்கவில்லை. "என்ன சொல்றீங்க?" என்று அவர் ஓரிரு முறை கேட்டபோது கூட அப்பா சிரித்துக் கொண்டே தலையாட்டினார்.

நாங்கள்  வீட்டுக்குத் திரும்பியதும் அப்பாவிடம் கேட்டேன். "விருந்தாளியை மறுத்துப் பேசினால் அவர் மனம் நோகலாம், அதனால்தான் அவரை மறுத்துப் பேசவில்லை  என்று முன்பு சொன்னாய். ஆனால் இப்போது நாம் விருந்தாளியாகத்தானே உன் நண்பர்  வீட்டுக்குப் போனோம்? இப்போதும் ஏன் பதில் பேசாமல் இருந்தாய்?" என்றேன்.

"நாம் ஒருவர் வீட்டுக்கு விருந்தினராகப் போயிருக்கும்போது அவர்கள் மனதை நோகடிக்கலாமா? அவர்கள் சொல்வதை நாம் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், சும்மா கேட்டுக்கொண்டு தலையாட்டிவிட்டு வருவதுதான் அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவம்!" என்றார் அப்பா.

இது 'தனக்கொரு நியாயம், மற்றவருக்கு ஒரு நியாயம்' இல்லாமல் வேறு என்ன?

ன்னொரு சம்பவம்.

நாங்கள் ஒரு வீட்டில் குடியிருந்தோம். வீட்டைக் காலி செய்யும்போது பாத்ரூமில் சில குழாய்கள் துருப்பிடித்து விட்டதாகக் கூறி அவற்றை மாற்றுவதற்கான செலவை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வீட்டுக்காரர் கேட்டார்.

'அது எங்கள் தவறினால் நேர்ந்ததில்லை' என்று அப்பா விளக்கியும் கேட்காமல், 'நாங்கள் வீட்டை உங்களுக்கு எப்படிக் கொடுத்தோமோ, அதே போல் எங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டியது உங்கள் கடமை" என்று வாதாடினார் வீட்டுக்காரர்.

அப்பா அதற்கு மேல் பேசாமல், அவர் கேட்ட தொகையை நாங்கள் கொடுத்த முன்பணத்திலிருந்து கழித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டார்.

அம்மா கூட, "பைப் துருப்பிடித்தது என்றால் அவர்கள் போட்ட பைப் தரமில்லாதது என்றுதானே அர்த்தம்? நாம் எப்படி அதற்குப் பொறுப்பாக முடியும்?" என்று அப்பாவிடம் கேட்டார்.

அதற்கு அப்பா, "பரவாயில்லை, விடு. வீட்டை அவர் எப்படிக் கொடுத்தாரோ அதேபோல் ஒப்படைக்க வேண்டும் என்று வீட்டுக்காரர் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது அல்லவா?" என்றார்.

இதற்குச் சில வருடங்களுக்குப் பிறகு  நகரின் வேறு பகுதியில் இருந்த எங்கள் வீட்டில் குடியிருந்தவர்கள் வீட்டைக் காலி செய்தார்கள். அவர்கள் வீட்டைச் சரியாகப் பராமரிக்காததால்  வீட்டில் பல பழுதுகள் ஏற்பட்டிருந்தன. சில மின் இணைப்புகள், பாத்ரூம் சுவர்கள் போன்றவற்றைப் புதிதாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

குடியிருந்தவரிடம் அப்பா "என்ன சார், வீட்டை இவ்வளவு மோசமாக வைத்துக்கொண்டிருக்கிறீர்களே! எனக்கு நிறைய ரிப்பேர் செலவு வைத்து விட்டீர்களே!" என்று கேட்டாரே தவிர, அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட இழப்பீடாகக் கேட்கவில்லை.

"நாம் குடியிருந்த வீட்டுக்கு ஆன ரிப்பேர் செலவுகளை நாம் ஏற்றுக்கொண்டது போல், நம் வீட்டு ரிப்பேர் செலவுகளைக் குடியிருந்தவர்களிடம் கேட்டு வாங்குவதுதானே நியாயம்?" என்றார் அம்மா.

"நம் வீட்டை நாம்தான் ரிப்பேர் செய்து கொள்ள வேண்டும். ரிப்பேர் செலவைக்  குடியிருந்தவர்களிடம் கேட்பது நியாயமில்லை. நம் வீட்டுக்காரர் நம்மிடம் கேட்டார் என்பதற்காக நாமும் நம் வீட்டில் குடியிருந்தவரிடம் கேட்பது எப்படி நியாயமாகும்?" என்றார் அப்பா.

"உங்கள் நியாயங்களே தனி!" என்று அலுத்துக் கொண்டார் அம்மா!