Thursday, May 7, 2015

1. யாரப்பா இவர்?

'அப்பா கதைகள்' என்ற தலைப்பைப் படிக்கும்போது இந்தக் 'கதைகள்' குறித்துப் பலவித யூகங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

1) 'அப்பா' என்ற புனைபெயரைக் கொண்டவர் எழுதிய கதைகள்

2) அப்பா சொன்ன கதைகள் (யாருடைய அப்பா? இந்த வலைப் பதிவை எழுதுபவரின் அப்பாவாக இருக்கலாம்!)

3) அமரர் தேவன் 'மல்லாரி ராவ் கதைகள்' என்று ஒரு தொடரை எழுதினார். அதுபோல், இது 'அப்பா' என்ற பெயர் உடையவரை(அப்பாசாமி, அப்பாத்துரை, அப்பாராவ் போன்ற ஒரு பெயரின் சுருக்கமாக இருக்கலாம்)ப் பற்றிய கதைகளாக இருக்கலாம்.

4 (அடே) 'அப்பா!' என்று வியக்க வைக்கும் கதைகள்

5) (போதும்) 'அப்பா' என்று அலுக்க வைக்கும் கதைகள்

6) பல்வேறு அப்பாக்களின் கதைகள்

இதற்கு மேலும் கற்பனை செய்வது உங்கள் திறமை.

இந்தப் பதிவில் இடம் பெறப் போகும் கதைகள் மேற்கண்ட எந்த வகையையும் சேர்ந்த கதைகள் இல்லை என்று சொல்லலாம். மேற்கண்ட எல்லா வகைகளையும் உள்ளடக்கிய கதைகள் என்றும் சொல்லலாம்.

இந்தக் கதைகள் ஒரு கற்பனை அப்பாவைப் பற்றியவை.  இந்தக் கதைகளில் வரப்போகும் அப்பா என் அப்பா இல்லை. ஒரு அப்பாவி அப்பாவாகிய நானும் இல்லை.  வேறு எவர் அப்பாவும் இல்லை.

இந்த அப்பா நேர்மை, அறிவுக் கூர்மை, அன்பு, இரக்கம், தெளிவு, பொறுமை போன்ற பல்வகை நற்பண்புகள் நிறைந்த ஒரு அப்பா. அத்துடன் சாமர்த்தியம் மிகுந்தவர். ஒரு ஸ்மார்ட் (smart) அப்பா. இவரிடம் சில சமயம் உங்கள் அப்பாவின் சாயல் தோன்றலாம். உங்கள் சாயல் கூடத் தோன்றலாம்!

ஒரு அப்பா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று போதனை செய்வது இந்தக் கதைகளின் நோக்கம் இல்லை. சில சமுதாய நிகழ்வுகளையும் அவற்றை இந்த அப்பா எப்படி எதிர் கொள்கிறார் என்பதையும் சற்றே நகைச் சுவையுடன் விவரிக்கும் ஒரு முயற்சி தான் இது.

'முயற்சி திருவினையாக்கும் என்பது என் அப்பனின் வாக்கு' என்று அப்பா அடிக்கடி சொல்லுவார்!




No comments:

Post a Comment